63 இலியிச்

கண்களில் பொறுக்க முடியாத வீக்கம். இவன் பிதற்றுவதை பார்க்கும்போது விஷத்தின் தன்மை மிக அதிகமாக இருக்கலாம்.

சாம்பல் நரிகள் வடதிசை நோக்கி செல்லும் கரிய இருளில் வேதாங்கி மூலிகையை கண்டறிவதும் கடினம் என்றுதான் எனக்கு தோன்றியது.

இவன் ஏன் இத்தனை மங்கலாக இருக்கிறான்? இவனுடைய நெற்றி பொட்டில் நரம்புகள் மஞ்சள் நிறத்தில் புரள்வது அத்துணை நல்ல விஷயமும் அல்ல...

நான் இன்னும் யோசித்தேன்.

மீசாகமாய் மரத்தின் பால் ஓரளவுக்கு சுவாசத்தை மீட்டு கொடுக்கும் என்று புரிந்தது. ஒரு கல்லால் அந்த மரத்தின் பட்டைகளை செதுக்கி சிறிதளவு பாலை கசிய வைத்தேன்.

அவன் லேசாய் முனகினான். அவனுக்குள் ஒரு இனம் புரியாத குரல் திணறி ஓடிக்கொண்டிருப்பதை நான் கேட்டேன். கேட்க முடிந்தது.

விஷத்தின் பரவல் முழங்காலிலும் வீக்கத்தை உண்டாக்கி கொண்டிருக்க அவன் புரண்டு படுக்க மறுத்தான்.

சிறிதளவு பாலை வாயில் புகட்டினேன்.

அவன் கண்களில் இன்னும் சிறிது பாலை கவனமாக ஊற்றினேன்.

சாம்பல் நரிகள் எக்காளமிட்டு தங்கள் ஊளை ஒலியில் நிலவை விரட்டி கொண்டிருந்தன. அவனை சுற்றிலும் ஊர்ந்து கொண்டிருந்த பெரிய செம்பூரான்களை குச்சியால் தள்ளி விட்டேன். அவன் முதுகில் அட்டைகள் ஒட்டி கிடந்தன. அவை சிறிது நேரத்தில் சுருண்டு செத்து விழுந்தன.

விஷம் இறங்கி கொண்டிருந்ததை நான் புரிந்து கொண்டேன்.

தரை வெளுக்கும்படி வெயிலோடு பகலும் வந்தது. அவன் பிடரியில் மூன்று கொடுக்குகள் ஒட்டி கிடந்தன.
அவை குளவியின் கொடுக்குகள்.

இரண்டு நாட்கள் அவன் இருந்த இடத்திலேயே பிணம் போல் கிடந்த பின் கண் விழித்தான்.


=================வரும்=============

எழுதியவர் : ஸ்பரிசன் (25-Feb-21, 6:45 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 98

மேலே