கண்ணாடியின் குரல்

ஒரு திருப்பத்தில்
அவளை பார்த்தேன்.
பின் அவள்
சாலையானாள்.

சாலையில் வெறிதே
பயணம் நீண்டது.
என்னை அவளின்
நிழலும் _ அவளை
மரணத்தின் நிழலும்
ஊடாடி வந்தது.

அவள் நதியாய்
மாறிக்கொண்டாள்.
கடல் புக மறுத்து
வானம் நோக்கி
பாய்ந்தாள்.

அவள் நகரமாய்
ஜொலித்தாள்.
வனமாய் மின்னி
பாலையாய் கொதித்து
மலையாய் அடர்ந்து
பூவாய் மலர்ந்தாள்.

சாலை
நில்லாது நீண்டது.
வழியெங்கும் அவள்
பேச்சுக்குரல்.
ஒலிக்குள் மிதந்தது
ஆழியின் பெருமூச்சு.

அவளின்
இதயத்தின் துடிப்பு
காதுக்குள் கேட்டது.
பின்னர்
பயணத்தை
நிறுத்தி கொண்டோம்.

அவள் அவளாக
வந்து சேர்ந்தாள்.
அன்றுமுதல்
நாங்கள்
நடக்க நேர்ந்தது
எங்களுக்குள் மட்டுமே.

அவள் என்னை
கடக்க நான்
அவளோடு அவளை
கடக்க...

நீண்டதொரு பயணம்.

அவள்
மூச்சுக்காற்று செய்யும்
தந்திரங்கள் அறிந்த
காலம் பிளந்தது.

அணிவகுக்கும்
மரணத்துக்கு ஊடே
அவள் காதல் கொள்ள
மீண்டும் ஒரு சாலைக்குள்
பாதை நீண்டது.

பயணம் என்பதெல்லாம்
அன்றன்று
தொலைந்து
அன்றன்று
முடிவதுதான் என்றாள்.

யாருக்குமற்றதுதான்
எந்த வாழ்வும் என்றாள்.

இக்கவிதையை எனக்கு
அவள் முகம் பார்த்த
கண்ணாடி சொன்னது.

:___________________________________:

எழுதியவர் : ஸ்பரிசன் (10-Sep-21, 10:09 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : kannadiyin kural
பார்வை : 64

மேலே