குப்பைத்தொட்டி

ஜனித்த மறுநொடியே உன்னை
குப்பைக்கு தத்து கொடுத்த....

ஜனனிக்காக உன் விலைமதிப்பற்ற
விழிநீரை வீண்விரயம் செய்யாதே கண்ணா!!!

விழிதாண்டி ஒருமுத்தையும் விழ அனுமதியாதே
உன்னை பலவீணப்படுத்தும் கருவியது!!!

விதி செய்த சதியென்று விட்டொழி,
உன் நன்முத்துக்களை பெறுவதற்கு
அருகதை அற்றவள் அவள்!!!

நன்மதிப்பை இழந்து, கூடா சகவாசத்தால்
மதிகெட்டழைந்த நங்கை அவள்!!!

உன் மட்டற்ற அன்பிற்கு தகுதி
அற்றவள் அவள்!!!

குப்பைக்கு தத்துக் கொடுத்தாலும்
முத்துப் பிள்ளை நீ!!!

ஜனித்தவள் தரங்கெட்டுப்போனால் போகட்டும்
பாரமாக எண்ணி, சுகத்தில் மிதக்க....

உன்னை தாரை வார்த்த அக்கணமே
அவள் மரித்தவள் ஆகின்றாள்!!!

பெற்றவள் உன்னை தியாகித்தால் என்ன?
எண்ணற்ற தாய் உன்னை அரவனைப்பர்!!!

அவள் உதிரப்பால் கிட்டவில்லையென்று
கிஞ்சித்தும் கலங்காதே கண்ணா....

அவள் உதிரம் நஞ்சாக கலந்திருக்கும்
உன் தூய உதிரத்தில்.....

அவ்வாறாகாமல் காத்த அத்தரங்
கெட்டவளுக்கு நன்றி சொல்.....

சுயநலம் போற்றும் அவள் நச்சுகுணம் உன்னிலும்
கலந்திருக்கும் அப்பாலை நீ அருந்தியிருந்தால்!!!

நீ சாதிக்க பிறந்தவன் கண்ணா,
சாதனைகள் பல நிகழ்திடவே.....

இப்பிரமாண்டம் உன்னை தேர்ந்தெடுத்து
உன் வழியில் இடறும்....

முட்களை களைந்து விட்டது
என்று எண்ணிக்கொள்!!!

அவள் உன்னை வளர்த்திருந்தாலும் நடுவழியில்
தன் சுகத்திற்காக விடுத்துச் சென்றிருப்பாள்......

அந்த வலிக்கு முகமே அறியாத
இந்த வலி மேல் அல்லவா?

விழி உதிர்க்கும் உதிரத்தை
புறங்கை கொண்டு துடைத்தெறி.....

இஃதே உன் கடைசி
விழிநீராக இருக்கட்டும்!!!

தரங்கெட்டவளுக்கு முன் சுயம்புவாக
வீரு கொண்டு எழு.....

அகிலமே அண்ணாந்து நோக்கட்டும்
உன் வளர்ச்சியை....

வேண்டே என உனை விடுத்துச் சென்றவள்
கதிகலங்கி ஓடி வரட்டும்!!!

நெஞ்சம் சுக்குநூறாக வெடிக்கட்டும்,
உனைவிடுத்த அக்கணத்தை எண்ணி!!!

உன்னை, உன்னிடமே மடிப்பிச்சை கேட்கட்டும்,
மனமிறங்காதே அவள் சுயநலத்தின் மருஉரு....

இப்பிரமாண்டத்தின் குப்பைத் தொட்டிகள்
அனைத்தையும் களைந்து எடு.....

அவர்களுக்கு தோள் கொடுத்து
புதிய சமுதாயம் படை!!!

குப்பைத் தொட்டிகளுக்கு அவசியம்
இல்லாமல் போகட்டும்!!!

உன் வரவுக்காக காத்திருக்கும் நெஞ்சங்களுக்கு
தோள் கொடு கண்ணா.....

"நீ சாதிக்க பிறந்தவன்"

எழுதியவர் : கவி பாரதீ (12-Sep-21, 11:47 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 75

மேலே