புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல் – திரிகடுகம் 39

வர்க்க எதுகையாக முறையே லை, ல, லை - பு’லை’மயக்கம், க’ல’மயக்கங், சொ’லை’முனிந்து – என்றும், மெல்லின எதுகையாக ’ம்’ ’ன்’ - பொ’ய்’ம்’மயக், ந’ன்’மை – என்றும், ’ய்’ ஆசிடையிட்ட எதுகையாக - பொ’ய்’ம்மயக் – என்றும் அமைந்த நேரிசை வெண்பாவாகும்.

நேரிசை வெண்பா

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்
கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து
பொ’ய்’ம்’மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்
ந’ன்’மை யிலாளர் தொழில். 39

- திரிகடுகம்

பொருளுரை:

இழி தன்மையுடன் கலத்தலாவது பொருளை விரும்பி நிற்கும் வேசியரை விரும்பிக் கூடுதல்,

பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது கள்ளைக் குடித்து வாழ்தல்,

பெரியோர் கூறும் உண்மை மொழியை வெறுத்து பொய்யோடு கலத்தலாவது சூதாட்டத்தில் இருத்தல் ஆகிய இந்த மூன்றும் அறம் இல்லாதவரது தொழில்களாம்.

கருத்துரை:

வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம்.

புலைமயக்கம் - புலையொடு மயக்கம், புலையை மயங்கும் மயக்கம், புலையினது மயக்கம் என்று மூன்று பொருளிலும் மயங்கும்.

பொருட் பெண்டிர் என்பது - பொருளை விரும்பும் பெண்டிர், பொருளுக்கு முயங்கும் பெண்டிர், பொருளால் முயங்கும் பெண்டிர் என முப்பொருளில் மயங்குவதாகும். கள்ளுண்டென்ற குறிப்பால் வாழ்தல் கெடுதலை யுணர்த்தியது.

சொல் - ஈண்டு மெய். சூது தன்னாலாகும் ஆட்டத்தை யுணர்த்தியது;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Nov-21, 8:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே