உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே அவ்வாய தாகும் அறம் – அறநெறிச்சாரம் 40
நேரிசை வெண்பா
ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துள்ளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப் பொருடெரிந் – தொன்றோடொன்
றொவ்வா உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம் 40
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஒன்றுக்கொன்று மாறுபட்ட புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள் இவையென ஆராய்ந்தறிந்து ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பலவகைப்பட்ட உயிர்களைக் காத்து அகத்தூய்மை பெற்றதே சிறந்த அறமாகும்.
குறிப்பு: உள் - அகம்; மனம்.