ஆங்கின்னா யாமென் பவரொடு நட்பு - இன்னா நாற்பது 24
இன்னிசை வெண்பா
ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காம முதிரின் உயிர்க்கின்னா1 வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு. 24
- இன்னா நாற்பது
பொருளுரை:
காவல் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும்;
தீச்செய்கை உடையவரது அருகிலிருத்தல் மிகவும் துன்பமாகும்;
காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும்;
அவ்வாறே யாமென்று செருக்குடன் இருப்பவரோடு கொள்ளும் நட்பானது துன்பமாகும்.
ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் எனச் சொல்ல வேண்டியதில்லை.