எட்டுறுப்பி னாய இயல்பினற் காட்சியார் சுட்டறுப்பர் நாற்கதியிற் றுன்பு – அறநெறிச்சாரம் 59
நேரிசை வெண்பா
அவ்வி நயமாறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதி னீக்கிச் சினங்கடிந்து - கவ்விய
எட்டுறுப்பி னாய இயல்பினற் காட்சியார்
சுட்டறுப்பர் நாற்கதியிற் றுன்பு 59
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
அச்சத்தால் வணங்குதல் முதலிய ஆறு விநயங்களும், உலக மயக்க முதலான மூன்று மயக்கங்களும்,
அறிவால் வருஞ் செருக்கு முதலிய எண்வகைச் செருக்குகளுமாகிய இவற்றை நன்றாக முற்றிலும் போக்கி,
வெகுளியையும் நீக்கி மேற்கொள்ளுதற்குரிய ஐய மின்மை முதலான எட்டு உறுப்புக்களோடு கூடிய சிறந்த காட்சியாராகிய அறிவினையும் உடையவர்கள் நால்வகைப்பட்ட பிறவியால் வரும் நோயை சுட்டு அறுப்பவராவர்; அழிப்பவராவர்.
குறிப்பு:
விநயம் - ஒழுக்கமுடைமை, அவ்விநயம் - ஒழுக்கமின்மை.
அவ்விநயம் ஆறாவன - அச்சம், ஆசை, லௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம்,
மும்மூடம்: உலக மூடம், பாசண்டி மூடம், தேவமூடம்.
எண்மயம்: அறிவுச்செருக்கு, புகழ்ச்செருக்கு, குலச்செருக்கு, வீரச்செருக்கு, தவச்செருக்கு, செல்வச்செருக்கு, ஆகூழ்ச்செருக்கு, அழகுச்செருக்கு,
எண்வகையுறுப்பு: ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை, பழிநீக்கல், நன்னெறியில் நிற்றல், அருளுடைமை, அறப்பொருளை விளக்கல்.
இவற்றையெல்லாம் பின்வருஞ் செய்யுட்களில் விளங்கக் காணலாம்.