புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை - இனியவை நாற்பது 34

இன்னிசை வெண்பா

எல்லிப் பொழுது வழ்ங்காமை முன்இனிதே
சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மாண்பினிதே
புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை
கொள்ளா விடுதல் இனிது. 34

- இனியவை நாற்பது

பொருளுரை:

இரவுப் பொழுதில் வழிப்பயணமாய் நடக்காமல் இருப்பது மிக இனியது.

(விடப்பூச்சிகள், விலங்குகள் முதலியனவற்றின் நடமாட்டம் இருப்பதாலும், பனி முதலியன நோய் செய்தலானும் ‘எல்லிப் பொழுது வழங்காமை முன்னினிதே' என்றார்)

பலவற்றைச் சொல்லும் பொழுதும், ஒன்றையும் மறதியின்றியும், அலட்சியம் இல்லாமலும் சொல்லும் மாட்சிமை இனியது.

வலியத் தாமாகவே வந்து நட்புக் கொண்டாலும், ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத கயவருடைய நட்பினைக் கொள்ளாமல் விலகி விடுவது இனியது.

சோர்வு - குற்றமாயின், சொற்குற்றம், பொருட்குற்றம் உள்ளிட்டன என்ப்படும்.

பொருளல்லார் – அறிவிலாதார் என்பார் பரிமேலழகர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 7:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே