வாள்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர் - இனியவை நாற்பது 33
இன்னிசை வெண்பா
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாள்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. 33
- இனியவை நாற்பது
பொருளுரை:
ஊரார் வெறுக்காத செயல்களைச் செய்து வரும் பெருமை மிக இனியது.
தலைவனாகிய தானே, தாமத குணத்தால் யாவர்க்கும் வருகின்ற சோம்பலினால் வீழாது முயற்சியால் செயல்களை நிறைவேற்றும் தன்மை மிக இனியது.
வாட்கள் நெருங்கி ஒன்றோடொன்று கலந்து மோதுகின்ற தீவிரமான போரில் மீளாத பெருமையுடைய அரசர்களது சேனைகள் பொருதலை ஓரரசன் விலக்குவது இனி்யது.
எத்துணை ஊக்கம் உடையார்க்கும் தாமத குணத்தால் சோம்பல் வருதல் இயல்பெனினும், அஃது அங்ஙனம் வந்தபொழுது அதனில் வீழாது, முயற்சியின் தலை நிற்றல் நன்றென்பதால், ‘தானே மடிந்திராத் தாளாண்மை முன்னினிதே' என்றார்.
முனிதல் - வெறுத்தல், ஊர் முனிதல் - எல்லோரும் வெறுத்தல்.