நற்காட்சிக்குரிய எண்வகை உறுப்புகள் - – அறநெறிச்சாரம் 68

நேரிசை வெண்பா

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல் - மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கஞ் செய்தலோ(டு)
என்றிவை எட்டாம் உறுப்பு. 68

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

சந்தேகமும், ஆசையும், வெறுப்பும், மயக்கம் ஆகிய இவை யில்லாமையும், பழியாயின வற்றினின்று உள்ளத்தை மீட்டலும், மனமொழி மெய்களை நன்னெறியில் நிறுத்துதலும், உயிர்களிடத்து மாறாத அருளுடைமையும், சிறந்த அறத்தினைப் பலர்க்கும் விளக்குதலுடனே ஆகிய இவ்வெட்டும் நற்காட்சிக்கு உரிய அங்கங்களாகும்.

குறிப்பு:

நற்காட்சி மன அமைதியாலுண்டாம் அரிய கடவுள் தோற்றம். இதனை, “மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி யென்றுரைப்பர், எப்பொருளும் கண்டுணர்ந்தார்” என்ற அருங்கலச் செப்புச் செய்யுளால் தெளிக.

ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை என இன்மையை மூன்றிடத்தும் கூட்டுக.

உறுப்பு-பயனுறுங் கருவிகள்;. என்ற+இவை=என்றிவை அகரந் தொகுத்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-22, 8:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே