421 மலமிகும் உடலை மதிப்பது மயக்கே - யாக்கை நிலையாமை 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

தினமு(ம்)விரே சனங்கொளினும் ஓயாமன் மலமாரி
..திரளாப் பெய்யுங்
கனம்போலுந் தேகமிதைப் பிரித்துநோக் கிடின்மலநீர்
..கசியுஞ் செந்நீர்
இனமாலை தோலென்பு தசைநரம்பு குடரன்றி
..இனிவே றுண்டோ
மனமேநீ யிதையுமொரு பொருளென்ன வுன்னவென்ன
..மருளுற் றாயே. 3

- யாக்கை நிலையாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! தினமும் மலம் கழிப்பதற்கு மருந்து உண்டாலும், விடாமல் மலம் மிகுதியாகப் பெய்யும்.

பொன் போலப் பொலியும் உடம்பைப் பிரித்து ஆராய்ந்தால், மலமும், சிறுநீரும் கசியும், குருதி, இனமாலை, தோல், எலும்பு, தசை, நரம்பு, குடல் அல்லாமல் வேறு என்ன இருக்கின்றது?

நீ இந்த உடலையும் ஒரு மதிக்கத் தகுந்த பொருளாக நினைத்து மயக்கம் கொள்கிறாயே” என்கிறார் இப்பாடலாசிரியர்.

விரேசனம் – மலம் கழிக்க விழுங்கும் மருந்து.
கனம் - பொன். மருள் - மயக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 9:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே