மொய்ம்பினவர் அயிற்சுவையும் பித்துணாக் கொள்பபோற் கொள்ப - நீதிநெறி விளக்கம் 86
நேரிசை வெண்பா
துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையும் எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவவென் றெண்ணி - அயிற்சுவையும்
பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர் 86
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
வேறு சிலர் போல ஐம்புல இன்பங்களால் அடிபடாத தவ வலிமையுடையோர் தூக்கத்தின் இன்பமும், அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும் மற்றுமுள்ள எல்லா இன்பங்களும் உண்டியினால் உண்டாகும் இன்பத்தால் வருவன என்று நினைத்து, அவ்வுண்டி கொள்ளுதலையும் பித்து உணா கொள்வது போல மிகச் சிறுகவே உண்பார்கள்.
விளக்கம்:
பித்தன் பசிக்கும்போது சிறிது உணவே கொள்வான். அதுபோல் துறவிகள் பசி காரணமாகச் சிறிது உணவே கொள்வார்கள். அயிற் சுவையும் என்னும் உம்மை ஏனைத் துயிற்சுவை முதலியனவும் குறைப்பரென்னும் பொருட்டு.
கருத்து:
உண்டி மிகுந்தால் சிற்றின்ப எண்ணங்கள் மனத்திலெழுமென்று துறவிகள் மிகவும் குறைவாகவே உண்பார்கள்.