போதத்தால் தாம்வேய்ந்த புக்கில் குடிபுகுதுவார் பொய்க்குடில் ஓம்புவரோ - நீதிநெறி விளக்கம் 87

நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு)

அன்பொ(டு) அருளுடையர் ஏனும் உயிர்நிலைமற்(று)
என்பியக்கங் கண்டும் புறந்தார் - புன்புலாற்
பொ'ய்'க்குடில் ஓம்புவரோ போதத்தால் தாம்வேய்ந்த
புக்கில் குடிபுகுது வார். 87

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

ஞானத்தால் தாம் அமைத்த பேரின்ப வீட்டிலே குடிபுகுதற்குச் சித்தமாயிருப்பவர்கள் முடைநாறும் ஊன் பொதிந்த பொய்க் குடிசையாகிய தம்முடம்பைப் பாதுகாப்பரோ? காவார்; காவாதொழிவதால், அன்பும் அருளுமுடையவராயினும் உயிர்க்கு நிலைக்களமாகிய தம்முடல் உணவில்லாமையால் மெலிந்து, எலும்புகள் தோன்றுவதைக் கண்ட போதுங் கூட அவ்வூனுடம்பைப் பாதுகாவார்.

விளக்கம்: புக்கில் - உரிய வீடு,

கருத்து:

பேரின்பமாகிய வீடுபேற்றை விரும்புகின்றவர்கள் சிற்றின்ப வீடாகிய உடம்பைப் பேணார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-22, 11:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே