முடிவே ஆரம்பம்

முடிவே ஆரம்பம் !
-----------------

யாவும் நிறைவேறிற்று !

பள்ளத் தாக்குகளிலும் மலைகளிலும்
வெள்ளமெனப் பொழிந்த ஒற்றைக்குரல்
ஒருகணம் ஓய்வெடுக்கிறது !

அற்புதங்களைப் பார்த்து மகிழ்ந்த மக்கள் !
அநியாயத்தைப் பார்த்தும்
அகம் குளிர்ந்தனர்!

வீர 'வசனம்' பேசியத் தோழர்கள்
யாரவரோ அறியோமென
தம்முயிரைத் தக்கவைத்தனர் !

கொல்கோதா குன்றில்
கொப்பளித்தச் செங்குருதி
குவலயத்தின் மூலை முடுக்கெல்லாம் தெறித்தது !

செங்குருதிப் பட்டவுடன்
உறைபனியாய் வெளுத்துப் போனது
உலகோரின் பாவக் கறை !

யாவும் நிறைவேறிற்று!

காத்திருந்தது ஒரு
புத்தம் புதுக் கல்லறை !
சந்தா பாக்கிக் கேட்காமல்
சந்தியில் நின்று போராடாமலேயே !

எமது
உள்ளமெனும் கல்லறையும்
வெள்ளையடிக்கப்
பட்டுக் காத்திருந்தது
உமக்காகவே !


கல்லறைக்குள்
அழிவில்லான் சுமந்த
அழிவில்லா ஊனுடல் !
அத்தோடு யாம் வைத்த
அசைக்கக் கூடா நம்பிக்கை !

யாவும் முடிந்ததென்ற
ஆனந்தத்தில் அலகைக் கூட்டம் !
யாவும் இனித் தொடங்குமெனும் எதிர்பார்ப்பில்
சிலுவைக் கூட்டம் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (16-Apr-22, 2:43 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே