பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் – நான்மணிக்கடிகை 88
இன்னிசை வெண்பா
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்குங் களிறு 88
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
முயற்சியின்மை கெடுவாரிடத்திலேயே ஏற்படும்; தீமை மேலோர் விரும்பாமையைச் செய்வாரிடத்தில் உண்டாகும்;
நன்மகளிர் விரும்பப்பட்ட நாணத்தின் எல்லையில் நிற்பார்கள்; யானை கீழே நட்டு வலிவமைந்த தூண் வலுவில் நிலைபெறும்.
கருத்து:
கெடுவாரிடத்திற் சோம்பலிருக்கும், சான்றோர் விரும்பாதவற்றைச் செய்வாரிடத்தில் தீமை யேற்படும்;
நல்லியல்புடைய மகளிர் நாண் எல்லையில் நிற்பர்; யானை தூணெல்லையில் நிற்கும்.
விளக்கவுரை:
கெடுவார் - பின்பு கெடுவார்;
பேணாமை - காக்கத்தக்க குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்க முதலியவற்றைக் காவாமையுமாம்;
நாணின் வரை நிற்பரென்பது நாண்கெடும் தொழில்களைச் செய்யாரென்றபடி; தூண் - கட்டுத்தறி