அறிவுடன் தமிழா விழி அயலவர் சூழ்ச்சி அழி

பசுத்தோல் போர்த்திய புலியெல்லாம்
பாசமாய் வந்து பழகுதன்றோ ?
விசும்பின் விழிநீர் வரும்வழியை
வன்மம் கொண்டு முடக்குதன்றோ ?
கசப்பைத் தேனில் குழைத்தெடுத்து
கன்னல் சுவையென ஊட்டுதன்றோ ?
புசித்திடும் உணவிலும் விடங்கலந்து
பசிக்கு மருந்தென தருகுதன்றோ ?


வஞ்சக எண்ணம் கொண்டோர்கள்
வணக்கம் சொல்லி விளித்திடுவார்
நெஞ்சில் உண்மை உணர்ந்துவிட்டால்
நாளும் தப்பிப் பிழைத்திடலாம்.
மஞ்சம் கண்டால் துயிலாமல்
மாத்தமிழ் காத்திட எழுந்துவிடு
வஞ்சகர் சூழ்ச்சி அறிந்துகொண்டு
வருமுன் அழிவைத் தடுத்துவிடு

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (10-Jun-22, 7:29 pm)
பார்வை : 78

மேலே