நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா கொலைகளவு காமத்தீ வாழ்க்கை – ஏலாதி 29
நேரிசை வெண்பா
நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா
கொலைகளவு காமத்தீ வாழ்க்கை - அலையளவி
மையெனநீள் கண்ணாய்! மறுதலைய விம்மூன்றும்
மெய்யள(வு) ஆக விதி 29
– ஏலாதி
பொருளுரை:
அலைத்தலைப் பொருந்தி கரிய நெடிய கண்களையுடைய பெண்ணே!
தத்தம் நிலைக்கேற்ப ஒழுகுகின்ற சான்றோர்க்கு ஓருயிரைக் கொல்லுதலும், திருடுதலும், கொடிய காம வாழ்க்கையும் உண்டாகா;
இவற்றிற் கெதிராவனவாகிய கொல்லாமை, கள்ளாமை, காதல் வாழ்க்கையென்னும் இந்த மூன்று செயலும் உண்மை நிலைக்கு ஏற்றனவாக அறிந்து கொள்க.
பொழிப்புரை:
தங்கட்குச் சொன்ன நிலையளவின்கண் நின்ற நெடியவர்கள் உடன்படாத கொலையும், களவும், காமத்தீ வாழ்க்கையுமென்னு மூன்றும், இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமையும், களவு காணாமையும், காம வாழ்க்கைப் பாடாமையும் என்னும் இம்மூன்றும் உடம்பின் தொழிலாக அலைத்தலை மேவிமையென நீண்ட கண்ணாய் விதிப்பாயாக.
கருத்து:
கொல்லாமை முதலியனவே நிலைபிறழாத சான்றோ ஒழுக்கங்களாம்.
மெய்யளவாக விதி - உயிருள்ள உடலின் தொழிலாக விதிப்பாயாக எனலுமாம்;
‘நெடியவர்பாற் கொலை முதலாயின நேரா; கொல்லாமை முதலாயினவே அவரொழுக்கங்களாம்' என்று பொருள் கூறுக.
கண்கள் கடை நீண்டு கண்டாரை வருத்துதல் பற்றி, ‘அலையளவிமையென நீள்கண்' என்றார்.
‘காமத் தீ வாழ்க்கையைத் தீய காமவாழ்க்கை யென்று கொள்க; அன்றிக் காமமென்னுந் தீயைப் பொருந்திய வாழ்க்கை யெனினுமாம்;
இதற்கு மறுதலையான வாழ்க்கை ‘காதல் வாழ்க்கை' யென்பது;