உடலின் இழிவு கண்டும் உலகிற்கு அறிவில்லை – அறநெறிச்சாரம் 126
நேரிசை வெண்பா
ஒருபாகன் ஊருங் களிறைந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின் - தருகாலால்
பேர்த்தூன்ற லாகாப் பெருந்துன்பங் கண்டாலும்
ஓர்த்தூன்றி நில்லா துலகு 126
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
மனமாகிய ஒரு பாகன் ஏறிச் செலுத்துகின்ற ஐந்து புலன்களாகிய யானைகளைந்தும் நின்ற இரண்டு கால்களோடு கூடிய நெடிய உடலானது வீழ்ந்தால், வேறு கால்களால் மீட்டும் நிலைபெறச் செய்ய இயலாத மிக்க துன்பச் செயலை நேரில் பார்த்தாலும்,
உலகினர் யாக்கை நிலையாமையை ஆராய்ந்து நன்னெறியில் நிலையாக நில்லார், இஃதென்ன பேதமை?

