காதல்

காலைப்பொழு தினிலே பொய்கையில் பூத்த
தாமரையில் உந்தன் எழில் முகம்கண்டேன்
பக்கத்து கொடியினில் மெல்ல விரியும்
நீல சங்கு புஷபத்தில் உன்னீல விழிக் கண்டேன்
பொய்கையில் வீழ்ந்தெழும் நீர்வீழ்ச்சியில்
உந்தன் இதழ்கள் விரிய வரும்
மோகனப் புன்னகைக்க கண்டேன் கண்ணே

வானின் நீல மேகத்தில் உந்தன்
தோளில் வந்து தவழும் கூந்தல் கண்டேன்

கிண்கிணி இசைக்கும் புள்ளின் ஓசையில்
கண்ணே உந்தன் சிரிப்பொலிக் கேட்டேன்

சோலைக் குயில் பாட்டில் உந்தன்
காதல் கீதம் காற்றில் வருவது கேட்டேன்

மலரும் மல்லிகைப்பூவின் வாசத்தில்
என்னை i மயக்கும் உன்மனம் கண்டேன்

இரவின் நிலவொளியில் உந்தன் குளுமை
என்னைத் தொட்டு தழுவக் கண்டேன்
n
கோபுர கலசங்களில் உந்தன் பொங்கும்
இளமை என்னைத் தீண்டக் கண்டேன்

ஓங்கி வளரும் ஹோமத் தீயில்
ஜொலிக்கும் உந்தன் தங்க உடல் கண்டேன்
உன்மீது நான் கொண்ட காதல்
வெறும் காமம் அல்ல மோகம் அல்ல
அது உண்மைக் காதல் காதல்
தீக்குள் விரலை விட்டேன் கண்ணே
' உன்னைத் தீண்டும் இன்பம் கண்டேன்'
நம் காதல் புனிதமடி கண்ணே
இன்னும் நான் என்ன சொல்லவேண்டும்
நீயே சொல் நான் கேட்பேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-22, 1:49 pm)
Tanglish : kaadhal
பார்வை : 168

மேலே