523 ஒளிமணி கடலின் ஆழத் துறையும் – பன்னெறி 3
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
குலமணி வெளியு றாதாழ்
குரவையூ டொளித்தி ருக்குஞ்
சலமிசை யெவருங் காணச்
சஞ்சரித் திடுந்து ரும்பு
கலமென மானம் பூண்ட
கலைவலோ ரடங்கி நிற்பர்
புலனில்சீத் தையர்த மைத்தாம்
புகழ்ந்தெங்குந் திரிவர் மாதோ. 3
– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
முத்துபவழம் முதலிய உயர்ந்த மணிகள் கடலின்கண் ஆழத்தில் மறைந்திருக்கும். கடல்நீரின் மேல்மட்டத்தில் எல்லாருங் காணும்படி சிறுதுரும்பு அங்கும் இங்கும் அலையும். அவைபோன்று, தன்மதிப்பே அணியெனக் கொண்ட கற்றறிவல்ல பெரியோர் அடங்கிநிற்பர். அறிவில்லாத கீழோர் தம்மைத்தாமே புகழ்ந்து எல்லா இடங்களிலும் மிக்க செருக்குடன் அலைவர்.
குலமணி - உயர்ந்த மணி. குரவை - கடல். சஞ்சரித்தல் - அலைதல். கலம் - அணி. மானம் - தன்மதிப்பு. சீத்தையர் -கீழோர்.