நுணலுந்தன் வாயாற் கெடும் - பழமொழி நானூறு 184

திடீரென்று 'நுண நாட்டியம்' என்ற சொல் என் நினைவில் ஓடியது. அதற்குப் பொருள் தேடி வலைத்தளத்தில் தேடினேன். சரியான செய்தி கிடைக்கவில்லை.

தண்ணீரில், மணலில் இருந்து குரல் எழுப்பி மாட்டிக் கொள்ளும் தவளையின் செயலைத்தான் 'நுண நாட்டியம்' என்று பேச்சு வழக்கில் வந்ததோ என்று எண்ணினேன்.

அப்பொழுது, உடன் எழுந்த பழமொழியும், அதன் பொருளும், விளைவும் இங்கே காணலாம்.

நேரிசை வெண்பா

பொல்லாத சொல்லி மறைத்தொழுகும் பேதைதன்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்!
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும் 184 பழமொழி நானூறு

பொருளுரை:

நற்குணமுடையாய்! மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் தவளை தன் குரலைக் காட்டி சப்தமிடுவதால் தன் வாயாலேயே தன்னைத் உண்ண வரும் பாம்பிடம் அகப்பட்டு இறந்தொழியும். அதுபோல, அறிவில்லாதவன் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பேசிப் பேசி, தன் அறியாமையை வெளிப்படுத்தி, தான் சொல்லும் தீய சொற்களாலேயே தனக்குக் கெட்ட பெயர் வரும்படி நடந்து கொள்வான்.

புறங்கூறுதலால் வருந்தீங்கு, தன் அறியாமையால் செய்து கொள்ளப்பட்டமையின், 'தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்' என்றார்.

இதனையே வள்ளுவரும்,

’யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ 127 அடக்கமுடைமை

என்று கூறியிருக்கிறார். எனவே, சொற்களை அளந்து பேச வேண்டும். தவறான செய்திகளைப் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் துன்பம் தானே வரும்.

கருத்து:

அறிவில்லாதவன் தன் வாயாலேயே தனக்குத் தீங்கு தேடிக்கொள்வான்.

'நுணலுந் தன் வாயால் கெடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-22, 8:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

சிறந்த கட்டுரைகள்

மேலே