திரியும் இடிஞ்சிலும் நெய்யுஞ்சார் வாக எரியும் சுடர் - பழமொழி நானூறு 219

நேரிசை வெண்பா
(’ர்’ மேல் உயிரெழுத்து அ இ ஏறி உயிரெதுகை ஆயிற்று)

திரியும் இடிஞ்சிலும் நெய்யுஞ்சார் வாக
எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால்
சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதேபோல்
நீரற நீர்ச்சார் வறும். 219

- பழமொழி நானூறு

பொருளுரை:

விளக்கு திரியையும் அகலையும் நெய்யையும் பற்றுக் கோடாகக் கொண்டு அழகாக எரியும்; சார்வுகளின்றேல் எரியாது,

அது போன்று ஆராயுமிடத்து சார்வாக நின்ற மூவகை வினையும் அற்றுப்போக (அவ்வினையறுதலே) விரைந்து பிறவித் துன்பத்தை நீக்கும்;

அதைப் போலவே நீர் அற்றுப்போகவே அந்நீரிற் சார்ந்து வாழும் உயிர்களும் இறந்து போகும்.

கருத்து:

வினையறவே பிறப்பறும்.

விளக்கம்:

மூவகை வினையாவன சஞ்சிதவினை, பிராரத்துவவினை, ஆகாமிய வினை என்பன. ஆகாமிய வினை பற்றற்றான் பற்றினைப் பற்றியவழி யல்லது நீங்காமையின், அது நீங்குதற் பொருட்டு அவனடியைப் பற்றவேண்டும்; பற்றவே, மூவகை வினையற, அதனாற் பிறவி நீங்கும்.

'நீரற நீர்ச்சார் வறும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-22, 8:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே