ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார் – நாலடியார் 327
நேரிசை வெண்பா
தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார் 327
- புல்லறிவாண்மை, நாலடியார்
பொருளுரை:
தாழ்ந்த அறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார், தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார், தம்முயிர்க்கு அரணாக அமைந்த அறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம் மதிமயங்கி முன்னை நல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில் அழுந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர்.
கருத்து:
புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வொட்டாமல் வீணாக்கிக் கொள்வர்.
விளக்கம்:
‘ஏமஞ்சார் நன்னெறியென்றது' வீடுபேற்று நெறி.