பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம் – நாலடியார் 328

நேரிசை வெண்பா

சிறுகாலை யேதமக்குச்செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம் 328

- புல்லறிவாண்மை, நாலடியார்

பொருளுரை:

இளம் பருவத்திலேயே தமதுசெல்லுமிடமாகிய மறுமைக்கு, அறமாகிய உணவு அழுந்த அழுந்தக் கட்டுணவு தேடிக் கொள்ளாதவராய்ப் பொருளில் இறுக்கம் மிகக் கொண்டு அறவினையைப் பிற்காலத்திற் காண்போம் என்று செம்மாந்திருக்கும் புல்லறிவினார்,

இறுதிக்காலத்திற் சாக்காட்டுத் துன்பத்தினால் அறநினைவு வந்து அந்நிலையிற் பேச நாவெழாமையால் அயலிலுள்ளார்க்கு அறஞ்செய்ம்மிந் எனக் கைக்குறியாகக் காட்டும் பொன்னும் அவராற் புளிச்சுவையுள்ள விளங்காய் கேட்டலாகக் கருதி மறுக்கப்படும்.

கருத்து:

புல்லறிவு எதனையுங் காலத்திற் செய்து கொள்ளாது ஏமாந்து பின் கவலும்.

விளக்கம்:

‘தமக்குச் செல்வுழி'யென்பதைத் ‘தம்செல்வுழிக்கு' என மாறுக.

வல்சி இறுகுதலாவது, கட்டுணாப் பொருட்டு நன்கு பிசைந்து செறித்தலால் அவை ஒன்றோடொன்று அழுந்திப் பொருந்துதல்;

கட்டுணவு கவளம் கவளமாக வைத்துச் செறித்துச் செறித்துக் கட்டப்படுவது போல் மறுமைக்கு உணவாகிய அறத்தையும் மேலுமேலுந் தேடிச் செறித்துக் கொள்ள வேண்டுமென்றற்கு, ‘இறுக இறுக'வென மிகுதிப் பொருளில் அடுக்குக் கூறினார்.

வழிநடையின்போது கட்டமுது தோளிற் கோக்கப்படுவதாகலின், ‘தோட்கோப்பு' எனப்பட்டது;

சாக்காட்டு நிலையிலிருப்பாருக்குப் புளிவிளங்காய் ஏலாதது ஒன்றாகலின் மறுக்கப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-22, 9:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே