வீட்டு நெறியின் இயல்பு – அறநெறிச்சாரம் 195
நேரிசை வெண்பா
ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பர் - நீர்புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்கு மாறு 195
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
காமவெகுளிகளை நீக்கி மனம் மொழி மெய்களால் தீயன புரியாது அடங்குதல் சிறப்புடைய வீடு பேற்றினை அடைவிக்கும் நெறி என்று ஆன்றோர் கூறுவர்;
அவ்வழி அடங்காது, புனல் மூழ்கித் துறவி வேடமட்டுங் கொண்டான் அடங்கினனாகப் பாவித்திருத்தல் தீயூழினையுடையார் அதனை வியந்து பின்பற்றுவதை யொக்கும்.
குறிப்பு:
கெட்டார் வழி வியக்கும் ஆறு - தவறிய ஒழுக்கமுடையார் அவ்வொழுக்கினை வியப்பது எனலுமாம்.