தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை எங்கண் வணக்குதும் என்பவர் – நாலடியார் 336

நேரிசை வெண்பா

தங்கண் மரபில்லார் பின்சென்று தாமவரை
எங்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
கற்கிள்ளிக் கையிழந் தற்று 336

- பேதைமை, நாலடியார்

பொருளுரை:

அழகிய தளிர்களையுடைய புன்னை மரங்கள் மலர்களைப் பூக்கின்ற கடற்கரையாய்!

தம்மிடத்தில் மதிப்பில்லாதவர் வழிச்சென்று அவரை எம்மிடம் அடங்கும்படி செய்வோம்' என்று சொல்லுவோர் கருதும் அச்சிறியோர் தொடர்பு, கருங்கல்லைக் கிள்ள முயன்று ஒருவன் கைவிரலை இழந்ததனோடு ஒக்கும்.

கருத்து:

திருந்தா இயல்புடையது பேதைமையாகும்.

விளக்கம்:

மரபென்பது ஈண்டு நன்மதிப்பு.

புன் கேண்மை என்றார், அப்பேதையர் தொடர்பை; கல்லையுங் கிள்ள முடியாது தாமுங் கைவிரலிழந்தாற் போல அப் பேதையோரையுந் திருத்த முடியாமல் தாமும் அவரால் தீங்குறப் பெறுவரென்பது; "கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல்"1என்றார் பிறரும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-22, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே