அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம் - பழமொழி நானூறு 232

இன்னிசை வெண்பா

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம். 232

- பழமொழி நானூறு

பொருளுரை:

மூங்கில்கள் நிறைந்து ஆர்ப்பரிக்கும் மலை நாடனே! தமக்குத் தகாத பொற்கலன்கள் தம்முடையதே ஆயினும் அவற்றைக் கொண்டு தம்மை அணி பெறச் செய்யார் மக்கள்.

அதுபோல, தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு நீக்குதலையே ஒருவன் விரும்புதல் வேண்டும்.

கருத்து:

தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையை ஏற்றல் கூடாது.

விளக்கம்:

தமக்குத் தகாதன பொற்கலனே யாயினும் ஏற்றுக் கொள்ளாதவாறு போல, பொருந்தாதன கூறுவார் தமரேயாயினும் கூறாதவாறு விலக்குதல் வேண்டும் 'தமரேயும்' என்றதனால் அயலார் கூறும் பொருந்தாதனவற்றையும் விலக்கவேண்டும் என்பது ஏற்படும்.

'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-22, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே