புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு - பழமொழி நானூறு 233
இன்னிசை வெண்பா
ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமா(று) அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு. 233
- பழமொழி நானூறு
பொருளுரை:
பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்து அறிவிற் சிறியார் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல், சாதற்குரிய விலங்குகள் செல்லும் வழியினை அறியாதவாறு அறிவு மயங்கலால் ஊரினுள் புகுந்து கண்களை இழந்து வருந்தியதை ஒக்கும்.
கருத்து:
பெரியாரோடு மாறுபடுவார் இறுதியை எய்துவர்.
விளக்கம்:
இவர்க்கு எம்மோடு மாறுபடுந் தகுதி இல்லை என்று கருதிய உரமே, தாமாகவே பெரியோர்களுக்கு முன்னிற்குமாறு செய்தது.
சாதற்குரிய விலங்குகள் அறிவு மயங்கி ஊரினுள் புகுதல்போல இறத்தற்குரிய மக்கள் அறிவுடையாரோடு மாறுபடப் புகுவர் என்பதாம்.
'போமாறு அறியா புலன்மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாதவாறு' என்பது பழமொழி.