குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என் - பழமொழி நானூறு 238
நேரிசை வெண்பா
நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய
மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை
அஞ்சிலென் அஞ்சா விடிலென் குருட்டுக்கண்
துஞ்சிலென் துஞ்சாக்கால் என். 238
- பழமொழி நானூறு
பொருளுரை:
நாவினால் ஒருபொருளை இரந்தாரது குறைவினை அறிந்து, தம்மிடத்தில் உள்ள செல்வத்தை மாட்சிமைப்படக் கரத்தலைச் செய்வார் தீய செயல்களுக்கு அஞ்சினால் அவர்கள் அடையும் நன்மை யாது? அஞ்சாதொழியின் அவர்கள் அடையும் தீமை யாது?
பார்வை இல்லாத கண் மூடியிருந்தால் என்ன தீமை? மூடியிராது திறந்திருந்தாலென்ன நன்மை?
கருத்து:
இரப்பார்க்கு கரக்கும் தீவினையே ஏனைய அறங்கள் எல்லாவற்றையும் அழிக்கும் ஆற்றல் மிக்கது. தீவினையாயவற்றுள்ளும் தலை சிறந்தது.
விளக்கம்:
'நாவிற்கு இரவின் இளிவந்த தில்' என்றமையின் 'நாவின்' என்றும், இரப்போர் குறையுறுவதற்கு முன்னே குறிப்பறிந்து கொடுத்தலே தக்கது. குறையுற்ற பின்னர்க் கொடுப்பது தக்கது அன்று என்பார் 'குறையறிந்து' என்றுங் கூறினார்.
தீவினைகளுள் தலைசிறந்த கரத்தல் என்னும் தீவினையை அவர்கள் செய்து கொண்டமையின் தீவினைக்கு அஞ்சுவதால் வரும் நன்மையால் பயனில்லை என்பர், 'அஞ்சலென்' என்றார்.
வேண்டிய தீவினைகளை அவர்கள் கரத்தல் வாயிலாகச் செய்து கொண்டமையின் தீய செயல்களுக்கு அஞ்சாமையான் வரும் தீவினை, அவரை யொன்றும் செய்தல் இல்லை என்பார், 'அஞ்சாவிடிலென்' என்றார்.
'குருட்டுக்கண் துஞ்சி லென் துஞ்சாக்கா லென்' என்பது பழமொழி.