உண்ணா இரண்டு ஏறு ஒருதுறையுள் நீர் - பழமொழி நானூறு 239

நேரிசை வெண்பா

உற்றா லிறைவற் குடம்பு கொடுக்கிற்பான்
மற்றவற் கொன்னாரோ டொன்றுமோ? - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
இரண்டே(று) ஒருதுறையுள் நீர். 239

- பழமொழி நானூறு

பொருளுரை:

தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடு கொண்டுளவாகிய இரண்டு காளைகள் ஒரு நீர்த்துறையில் தண்ணீர் உண்ணுமோ? தம்முள் பொருந்தி நீர் பருகுதல் இல.

அதுபோல, ஓர் இடையூறு தம்மரசனுக்கு வந்துற்றால் உடம்பினை அவன் பொருட்டு அளிக்கவல்லவன் அவனுக்குப் பகையாயினாரோடு கீழறுக்கப்பட்டுச் சேர்தலுண்டோ? இல்லை.

கருத்து:

பகைவராற் கீழறுக்கப் படாததாய் இருப்பதே படையின் இயல்பாம்.

விளக்கம்:

உயிரும் உடம்பும் தம்முள் இயைந்து நிற்கும் ஒற்றுமை கருதி உடம்பு என்றாராயினும், உயிர் என்பதே கருத்தாகக் கொள்க.

பகைவராற் கீழறுக்கப்படாததாகவே அரசன் மாட்டு அன்புடைமை பெறப்படும்.

'முரண்' என்பது மாறுகோடற்கு ஏதுவாகிய வலிமையின் மேல் நின்றது. மாறுகொண்ட இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீருண்ணாவாறு போல, வீரர் எனப்படுவார் கீழறுக்கப்பட்டுப் பகைவரோடு ஒன்றுதல் இலர்.

'உண்ணா இரண்டு ஏறு ஒருதுறையுள் நீர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-22, 4:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே