561 சிற்றுயிர்க்கும் செய்தொழில் சேர்த்தோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 19

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

உயிருயத் தகுமு பாயம்
..ஒருவரை யொருவர் பார்த்துப்
பயிலுவோ மியற்கை யாப்புள்
..பலவிலங் குரிய வூண்கண்டு
அயிலல்வா ழுறையுள் செய்தல்
..அணைந்தினம் பல்கல் மற்றைச்
செயிரறு தொழில்க ளெல்லாஞ்
..செயப்படிப் பித்தோன் யாரே. 19

– தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

உயிருய்வதற்குத் தக்க வழிகளை நாம் ஒருவரை யொருவர் பார்த்துங் கேட்டும் பழகி வருகின்றோம். ஆனால், பறவை விலங்கு முதலிய சிற்றுயிர்கள் இரைதேடி விழுங்கலும், கூடு முதலிய இருக்கை யமைத்தலும், ஆண், பெண் இணைந்து மருவி இனம் பல்கச் செய்தலும் பிறவும் தாமாகவே செய்துகொள்ளும்படி ஆற்றல் அமைத்தவன் யாவன்? அவனே முழுமுதற் கடவுள்.

உய்ய - பிழைக்க. உபாயம் - வழி. பயிலுவோம் - பழகுவோம். அயிலல் - விழுங்கல். உறையுள் - இருக்கை. இனம் - கூட்டம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Dec-22, 3:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே