486 பசிமண் ஓடு பற்றலால் முத்தேவர் பாங்கானோம் – கணிகையரியல்பு 13
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பசையறவெம் மாவியன்னாள் கைப்பொருளெ லாம்பறிக்கப்
..பசியால் நான்கு
திசைமுகமும் நோக்கலினாற் றிசைமுகனா னோம்வாயில்
..தீயாள் இட்ட
வசையிலான மண்ணுண்டு மாயனுமா னோங்கையின்
..வாங்கும் ஓட்டால்
இசைமேவும் ஈசனுமா னோம்புவியில் நமையொப்பார்
..எவர்தாம் அம்மா. 13
– கணிகையரியல்பு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
எம் உயிரையொத்த பொதுமகள் எம்முடைய கைப்பொருள் எல்லாங் கவர்ந்து யாம் வெறுமையானபின் பசியால் நாற்புலமும் நோக்கலானேம்; அதனால் நான்முகனானோம்.
அக்கொடியாள் வைது திட்டி வாயில் மண்ணை யள்ளியிட்டாள். அதனால் மண் உண்ட மாயவனானோம்.
அவள் தரும் ஓட்டைக் கையில் வாங்கியதால் புகழ் மிக்க முதல்வனாம் ஆண்டவனானோம்.
ஆதலால், முத்தேவராகிய நம்மை ஒப்பவர் இவ்வுலகில் யாவருளர்?
பசையற - பொருள் நீங்க; வறுமையுற. ஈசன் - முதல்வன்; ஆண்டான், புவி - உலகம்