யார்க்கானும் அஞ்சுவார்க்கு இல்லை அரண் - பழமொழி நானூறு 254
இன்னிசை வெண்பா
வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
அஞ்சுவார்க்(கு) இல்லை அரண். 254
- பழமொழி நானூறு
பொருளுரை:
மேகங்கள் சூழ்ந்து நிற்கும் சோலைகளை உடைய மலை நாடனே! யாவர்க்காயினும் மனம் அஞ்சுவார்க்கு அரண்களாற் பயனில்லை; ஆதலால்,.வலிமை உடையராயினாரைச் சார்பாகப் பெற்றிருப்பினும் தம்முடைய வலிமையாகிய சார்பைப் பெற்றிராதவரை வலிமை உண்டாக்குவித்து புகழிற்குக் காரணமாகிய செயல்களில் அவரை நிலைநாட்ட இயலுமோ?
கருத்து:
அரசன் எத்துணைச் சார்பு பெற்றிருப்பினும் அவன் சார்பு அவனுக்கு இன்றியமையாத தொன்றாம்.
விளக்கம்:
தேசு, காரணத்திற்கு ஆயிற்று. மனம் அஞ்சுவார்க்கு அரணாற் பயனில்லையாதல் போல, தம் வலியில்லாதார்க்குத் துணைவலியால் வெற்றி யெய்துதல் இல்லையாம்; துணை வலியாற் பயனில்லையாக முடியும்.
'யார்க்கானும் அஞ்சுவார்க்கு இல்லை அரண்' என்பது பழமொழி.