சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாள் - பழமொழி நானூறு 255
நேரிசை வெண்பா
சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம்
இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத்
திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும்
கடலுள் துலாம்பண்ணி னார். 255
- பழமொழி நானூறு
பொருளுரை:
தான் கூறுவதற்கு முன்னரே முகம் நோக்கி மனக் குறிப்பினை அறியும் பண்பினை உடைய தன் மனைவியே வந்த விருந்தினர்களுக்கு வேண்டுவன செய்து ஓம்ப,
அதனால் செல்வத்துடன் துன்பமின்றி இன்பமுற்று வாழ்ந்தவர்களே நாடோறும் கடலிலுள்ள நீரைத் துலா இட்டு இறைப்பவரோடு ஒப்பர்.
கருத்து:
குறிப்பறிதலும், விருந்தோம்பலும் உடைய இல்லாளோடு செல்வத்துடன வாழ்பவர்களே நீங்காத இன்பமுடையார்.
விளக்கம்: 'ஏமம் + ஆர்ந்திருந்தாரே' ஏமாந்திருந்தாரே எனத் தொக்கது. 'கடலுள் துலாம் பண்ணினார்' என்றது, கடல் நீரை இறைக்கப் புகுவார் நீர் குறைதல் இன்றி எஞ்ஞான்றும் பெறுதல் போல, எஞ்ஞான்றும் நீங்கா இன்பம் எய்துவர் என்பதாயிற்று.
நாளும் கடலுள் துலாம் பண்ணினார்' என்பது பழமொழி.