567 ஈந்தானை மறந்து பொருள் எண்ணல் இழிவாம் - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 25

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

தனந்தந்தான் றனையி கழ்ந்து
..தனத்தினைத் தொழில்போ லீசன்
அனந்தந்தான் வாழ்வு தந்தான்
..ஆவியு முடலுந் தந்தான்
இனந்தந்தான் இன்பந் தந்தான்
..யாவுந்தந் தானை நீங்கி
முனந்தந்த பொருள வாவு
..மூடருன் சீடர் நெஞ்சே. 25

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மனமே! இம்மை மறுமை வாழ்வுகட்குரிய பொருளை ஈந்த வள்ளலைப் பொருட்படுத்தாது அப்பொருளைப் போற்றிப் புகழ்வது எவ்வளவு அறிவில்லாத செயலோ அதற்கு மேம்பட்டதாகும்
சோறும், வாழ்வும், உயிர்ப்பும், உடலும், உறவும், உள்நிகழும் இன்பும் முதலியதும் தந்தருளிய ஆண்டவனைப் புகழாது அப்பொருள்களைப் புகழ்ந்து, இடைவிடாது அவற்றினையே நினைவு கூர்ந்து வேட்கையுறல்.

அத்தகைய அறிவிலிகள் உன்னுடைய மாணவராவர்.

தனம் - பொருள். அனம் - சோறு. ஆவி - உயிர்ப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 9:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

சிறந்த கட்டுரைகள்

மேலே