464 துன்புக் கஞ்சில் துணையறம் கிட்டா - அறஞ்செயல் 16

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சூற்றுயர்க் கஞ்சு வாட்குச்
= சுதரிலைப் பயனொன் றில்லைக்
காற்றினுக் கஞ்சா நின்ற
= கலத்தினுக் கவிழ்தங் கைப்பென்(று)
ஏற்றிட வஞ்சி னாரோக்
= கியமிலை யின்னற் கஞ்சிற்
சாற்றரு மறமு மில்லைத்
= தனிப்பர கதியு மின்றே. 16

- அறஞ்செயல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கர்ப்பம் தரித்து துயருர வேண்டுமே என்று அஞ்சுபவர்க்கு மக்கட்பேறு இல்லை.

காற்றுக்கு அஞ்சி நிற்கின்ற கப்பலால் பயன் ஏதுமில்லை.

மருந்து கசக்கிறதென்று அருந்திட அஞ்சுபவர்க்கு உடல் நலம் இல்லை.

துன்பத்திற்கு அஞ்சுபவர்க்கு சொல்வதற்குரிய பெரிய நன்மையும் இல்லை. வேறு கடவுளின்பமும் இல்லை” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சூல் - கரு. சுதர் - மக்கள். கலம் - கப்பல். அவிழ்தம் - மருந்து. பரகதி - கடவுளின்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 9:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே