அந்நெல் வயனிறையக் காய்க்கும் வளவய லூர மகனறிவு தந்தை யறிவு – நாலடியார் 367
நேரிசை வெண்பா
செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வய’னி’றையக் காய்க்கும் வளவய லூர!
மக’ன’றிவு தந்தை யறிவு! 367
- பன்னெறி, நாலடியார்
பொருளுரை:
செந்நெல் வயல் நிறைய விளைந்து கிடக்கும் வளமான கழனிகளையுடைய ஊரனே!
சாலி என்னும் உயர்ந்த செந்நெல்லின் விதையினால் உண்டான செழுவிய முளை பின்னும் அச்செந்நெற் பயிராகவே தோன்றி விளைதலால், புதல்வன் அறிவு அவன் தந்தையின் அறிவு வகையை ஒத்ததாகும்.
கருத்து:
புதல்வனுடைய அறிவு ஒழுக்கங்களை விரும்புந் தந்தை, தான் நல்லறிவு நல்லொழுக்கம் உடையவனாய் விளங்குதல் வேண்டும்.
விளக்கம்:
செந்நெல், நெல்லின் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தது. காய்க்கும் என்றது, ஒரு வழுவமைதி.
ஊரன் - மருத நிலத்துத் தலைவன்.
இச்செய்யுள், ஒருவன் அறிவு செயல் முதலியவை அவன் மரபினரையுஞ் சாரும் என்றறிவுறுத்து முகத்தால், அவனை நன்னிலையில் நிறுத்த விரும்பிற்று!