துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் - நீதிநெறி விளக்கம் 100

நேரிசை வெண்பா

கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத்
துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம்
இறந்தவெலாம் துன்பமலா(து) இல் 100

- நீதிநெறி விளக்கம்

'இறந்தவெலாந் துன்பமே யாம் என்பதும் பாடம்!

பொருளுரை:

கற்க வேண்டிய நூல்களெல்லாம் கற்றுக் கற்றதற்குத் தக நிற்குங் கணவனுக்கு கற்புள்ள மனைவி பெற்றுக் கொடுத்த முதல் மகனைப் போல்,

இருவகைப் பற்றினையும் அறவே யொழித்த துறவிகட்கு அவர்களின் மெய்யுணர்வில் தோன்றுகின்ற இன்பமே மிகுந்த இன்பமாகும். அஃதொழித்த பிறவெல்லாம் (அவர்கட்குத்) துன்பமன்றி வேறில்லை!

விளக்கம்:

பிற்காலத்தில் தந்தைக்குரிய பொறுப்புக்களை ஏற்றுப் பணிபுரிதல் முதலியன முதல் மகனுக்கு உரித்தாதலின் 'கற்பினாள் பெற்றுக் கொடுத்த தலைமகன்' மிகவும் மதிக்கப்படுகின்றான்.

துறை - இங்கு வகை;

இருவகைப்பற்று - உடல் என்னும் அகப்பற்றும், உடைமை என்னும் புறப்பற்றும்;

கருத்து:

முற்றுந் துறந்த முனிவர்கட்கு அவர்கள் மெய்யுணர்வில் தோன்றும் இன்பமே இன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-23, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே