ஓரறையுள் பாம்போடு உடனுறையும் ஆறு - பழமொழி நானூறு 349
நேரிசை வெண்பா
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ ஓரறையுள்
பாம்போ(டு) உடனுறையும் ஆறு. 349
- பழமொழி நானூறு
பொருளுரை:
மலைமீதுள்ள மூங்கிலை வருத்தும் மென்மையான தோள்களை உடையாய்!
தலைமை நிலையைப் பெறவேண்டும் என்று கருதும் தன்மை உடையவர்களை அரசன் அவர் அஃதிலராகப் புறத்தே நடிக்கும் வஞ்சக நிலையால் அவரைத் தம்மையொப்பத் தலைமை செய்து தான் சோர்ந்திருத்தல் அங்ஙனமிருத்தல் ஓர் அறையினுள்ளேயே ஒருவன் பாம்போடு கூடத் தங்கியிருத்தலை ஒக்கும்.
கருத்து:
வஞ்சனை உடையாரைத் தலைமை செய்து அரசன் சோம்பி இருத்தல் ஆகாது.
விளக்கம்:
'கருதும்' என்றமையால் தலைமை பெறவேண்டுமென்ற விருப்பம் மனத்தகத்ததாம்.
'நிலைமையால்' என்றமையால் அஃதிலார் போன்று புறத்தே ஒழுகுதலை.
'நேர் செய்திருத்தல்' என்பது சச்சந்தன் கட்டியங்காரன் உள்ளம் ஓராது புறநிலையால் அரசளித்து இன்பத்துள் ஆழ்ந்திருந்தமை போல்வது.
பாம்போடு உடனுறைவார் உயிரை இழத்தல் உறுதியாமாறு போல வஞ்சக நெஞ்சமுடையாரைத் தலைமை செய்தாரும் அரசினை இழத்தல் உறுதியாம். மனத்தால் நினைத்து வாழ்ந்தார் அது பற்றுக் கோடாக அரசியலைப் பற்றுதல் உறுதியாம்.இதுவன்றி உயிருக்கும் தீங்கிழைப்பர் என்பதாம்.
'ஓரறையுள் பாம்போடு உடனுறைந் தற்று' என்பது பழமொழி.