அஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு - பழமொழி நானூறு 356

நேரிசை வெண்பா
(லொ வொ இடையின எதுகை)

பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை
வேலொடு நேரொக்கும் கண்ணாய்! அஃதன்றோ
பூவொடு நாரியைக்கு மாறு. 356

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஒளி வீசுகின்ற இலைவடிவாகச் செய்யப்பட்ட வேலொடு நேராக ஒத்த கண்ணையுடையாய்!

உயர்ந்த குடியிற் பிறந்தவர்களும் கீழ்மக்களைத் தமக்கு இனமாகக் கொண்டொழுகுதல் ஆகிய அச்செய்கை பூவோடு நாரைச் சேர்க்கும் நெறியல்லவா?

கருத்து:

பெரியார் சிறியாரோடு ஒழுகுதல் பூமாலையைப் போல் அழகினைத் தருவதாம்.

விளக்கம்:

பூவினால் நாரும் மணம் பெறுதல் போல, பெரியோரால் சிறியோரும் நற்குணம் பெறுவர். சிறியார் இனமாய்.ஒழுகுதல் அவர்களை நன்னெறியில் நிறுத்தற் பொருட்டேயாகும்.

'பூவொடு நார் இயைக்குமாறு' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-23, 7:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே