மழையின் குரல்
என்னுடைய சுயசரிதை எழுதும் நேரமிது
எதிர்காலம் என்றும் எனக்குக் கேள்விக்குறி
எழுதி வைத்தால் சரித்திரம் ஆகும்
எதிர்கால சந்ததி உணர்ந்து பார்க்க
வானின்று விழும் மழைதான் நான்
வருணனென்று கைதொழுது கும்பிடுவோர் பலர்
பயிர்கள் வாழ பருவ மழையாய்
பாசனம் செய்ய பாய்ந்து ஓடுவேன்
நாவறண்ட உயிர்களுக்கு உயிர்ஜீவன் தரும்
நன்னீராய் ஏரியில் சேருவதும் நானே
சந்தோஷம் மிகுந்தால் சாரலாய் தூவுவேன்
சினமெடுத்தால் அடைமழையாய் அடித்து ஓய்வேன்
கடலை நோக்கி ஓடினால் ஆறாவேன்
கடலில் இருந்து ஆவியாகி மழையாவேன்
கட்டிடங்கள் தடுத்தால் போகும் வழிமாறி
குட்டையாய் நிற்ப்பேன் குடியிருப்பு மத்தியில்
காடும் மலைகளும் தோழர்கள் எனக்கு
காடழிந்தால் மறையப் போவது நானுந்தான்
என்னழிவில் உன்னழிவும் மானிடா விதிதான்
எண்ணி செயல்பட்டால் வாழ்வு நமக்கு