பாப்பா பாப்பா மயங்கிடாதே
பாப்பா பாப்பா மயங்கிடாதே
கைப்பேசிக்குள் முடங்கிடாதே
உலகம் பெருசு மறந்திடாதே
உனக்குள் மருகி அடங்கிடாதே
அங்கே பார் பச்சை மாமலை
மலையை சுற்றி வெள்ளை பூமேகம்
மலையின் மேலே நீல வானம்
மேலிருந்து வீழும் வெள்ளி தேனருவி
இடையில் ஓடும் கருநாகப் பாதை
பூத்து குலுங்கும் பூக்களின் பூந்தோட்டம்
தாவி குதிக்கும் குரங்குகளின் குத்தாட்டம்
துள்ளி ஓடும் மான்களின் தொடரோட்டம்
அசைந்து போகும் யானைகளின் தேரோட்டம்
கார்மேகம் கண்டு மயில்களின் களியாட்டம்
மேனியை தழுவிடும் முகிலின் குளிரோட்டம்
இத்தனையையும் உனக்காக
ஏன் உன்னை அறைக்குள் அடைக்கிறாய்?
ஓடி ஒளிந்து மறைகிறாய்?
வெளியில் வா...இயற்கையோடு ஒன்றாகிடு