நம்பிக்கை

நம்பிக்கை நெஞ்சில் நிறைகவே !
——
உள்ளத்து உறுதியும்
உடலதன் உழைப்புமே
துள்ளிடும் பகையினைத்
துரத்திடும் விந்தையே !

தெளிவிலாப் பாதையைத்
தேர்ந்திட்ட போதிலும்
வழியாக மாறுமே
வல்லவன் உனதடிகள் !

புதியவைகள் சமைப்பதுவும்
புவிக்கோளம் காப்பதுவும்
மதிநுட்ப மாந்தர்களின்
மகத்தான செயல்களன்றோ !

பலமென்ன அறிந்துவிடு
பலவீனம் தெரிந்துவிடு
உலகமெலாம் அதிர்ந்திடவே
உன்திறமைக் காட்டிவிடு !

தோல்விகளில் துவளாது
வெற்றியினில் வியக்காது
கோல்வளையா மன்னனென
குவலயத்தில் நிமிர்ந்துவிடு !

நெகிழாத நம்பிக்கை
நெஞ்சில் நிறைகவே
தமிழாகத் தளராது
தரணியை வெல்கவே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (8-Jul-24, 6:47 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 42

மேலே