நாடுவர் விண்ணோர் நயந்து - ஏலாதி 34
இன்னிசை வெண்பா
சிதையுரையான் செற்ற முரையான்,சீ றில்லான்
இயல்புரையா னீன முரையான் - நசையவர்க்குக்
கூடுவ தீவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து! 34
- ஏலாதி
பொருளுரை:
கோவைக்கனியைப் போன்ற சிவந்த வாயையுடைய பெண்ணே! கீழ்மை பேசாமலும், பகைமை பேசாமலும், பிறர்மேற் சினத்தல் இல்லாமலும், தனது நல்லியல்பினைப் புகழாமலும், குற்றஞ் சொல்லாமலும் தன்னை விரும்பி வந்தவர்கட்கு இயல்வது கொடுத்துதவுவா னொருவனை தேவர்கள் விரும்பி மகிழ்வார்.
கருத்து:
கீழ்மை பேசாமை முதலியன உடையானைத் தேவரும் விரும்புவார்.