அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கானே

அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே ஆண்டவனுக்கு கண் இல்லையோ என நினைத்து நம்பிக்கை இழக்காதீர்கள்

நாங்கள் எல்லோரும் வாழும் கிராமம் ஒரு அமைதி நிறைந்த இடம்.அதில் குடியிருக்கும் மக்கள் எல்லோரும் விவசாயத்தை நம்பி வாழ்கிறவர்கள்.அங்குள்ள பலர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து முதலாளியிடம் சென்று அவர் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். சிலர் தங்களது நிலத்திலேயே பயிர் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்தனர். எல்லோரும் கூடி பேசுவது ஒன்று தான் அக்கிரமம் செய்பவர்கள் மிக நன்றாக வாழ்கிறார்கள் கடவுளுக்கு கண்ணில்லையா இவர்களை தண்டிக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கிறார் என்பது தான். இவ்வாறு என்றும் இந்த நினைப்புடனும், மனக்கசப்புடனும் வாழும் பொழுது எங்கள் கிராமத்திற்கு மகிமைவாய்ந்த மகான் ஒருவர் வந்திருந்தார்.அவரிடமும் எல்லோரும் சென்று மனதில் உள்ள குறைகளைக் கூறி கடவுள் ஏன் இவ்வாறு அக்கிரமக்காரர்களை நன்றாக வாழவைக்கிறார் என வினவிட
வந்த மகான் எங்களது வார்த்தைகளைக் கேட்டு ஒரு புன்னகையுடன் நாம் எல்லோரும் எண்ணுவது மிகவும் தவறு ஆண்டவன் அவர்களுக்கு தண்டனையைக் கொடுப்பதை தாமதிப்பது அவர்கள் திருந்த கொடுக்கும் அவகாசம், திருந்தினால் நன்மை இல்லையேல் பல விதங்களில் துன்பங்கள் வந்து பின் அவன் தன்னை மாய்த்துக் கொள்வான்,பின் வரும் கதையைக் கேட்டு அதன் சாராம்சத்தை அறிந்து கொள்ளவும் எனக் கூறி எங்களை அமரச் சொன்னார். அவர் பகவத் கீதையில் உள்ள சில ஸ்லோகங்களைக் கூறி அதைப் பற்றி புரிந்து கொள்ள இந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் இது நம் எல்லோர் மனதிலும் எழும் பல கேள்விகளைப் போக்கிடும்


முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் நல்ல முறையில் நாட்டை ஆண்டு வந்தான். தன் மக்களின் நலனைக் காக்க வேண்டி நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வேண்டிய அதிகாரங்களையும் கொடுத்தான். தனது அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். சில மாதங்கள் சென்றது, மன்னரின் ஒற்றர்கள் வந்து மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகக் கூறிட ,மன்னன் அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான்.
மூன்று அதிகாரிகளும் நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.
அவர்கள் மூவரும் செய்த ஊழலை மிகத் திறமையாகச் செய்திருக்க .
இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்கு ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என நினைத்தான் மன்னன்.
அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைத்தான் .

மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்.. மன்னன் மனதில் நினைத்தான் இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், இந்த மூன்று மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்தி மக்களின் நலத்தை காத்துப் பசியையும் போக்கலாம்.

மறுநாள் காலையில் மூவரும் நாட்டின் வெளியே உள்ள வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப் பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.
மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.
மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''
மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி
தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான
காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை அமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்.''
வினையை விதைத்துவிட்டு அறுவடைக்காலத்தில் சாமர்த்தியமாக வெளியூர் சென்று விட்டாலும் வினையிடமிருந்து தப்ப முடியாது.

வினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தேயாக வேண்டும்.
நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு
பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே
கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி.
இதற்கு விதி விலக்கும் இல்லை.

மகான் இந்தக் கதையைக் கூறி முடித்து மக்களிடம் உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமாக நன்மையும் சுகமும் வேண்டும் என்று நினைத்து உங்கள் செயல்களை செய்யுங்கள். உங்கள் செயல்களின் பலனை நீங்கள் வாழும் பொழுதே அடைவீர்கள்.
ஆண்டவனை என்றுமே குறை கூறாமல் நடப்பவை யாவும் நமது நன்மைக்கே என நினைத்துக்கொண்டு வாழும் நாட்களை நடத்துங்கள். இறைவன் உங்களை என்றும் மகிழ்ச்சியாக வைத்திருப்பான் என்று முடிக்க எல்லோரும் அவ்விடத்தில் இருந்து மன நிம்மதியுடன் வீட்டிற்கு சென்றனர்.

எழுதியவர் : கே என் ராம் (26-Apr-25, 1:27 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 4

மேலே