ூல் திரும்பிப் பார்க்கிறேன் நூலாசிரியர் கவிஞர் இராஇரவி பொருண்மை வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் மதிப்புரை முனைவர் நசெகிசங்கீத்ராதா
நூல்: திரும்பிப் பார்க்கிறேன்
நூலாசிரியர் :கவிஞர் இரா.இரவி
பொருண்மை: வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள்
மதிப்புரை : முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா.
வெளியீடு :வானதி பதிப்பகம்
பக்கங்கள் 78. விலை ரூபாய் 70..
23.தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17
தொலைபேசி044 24342810 / 24310769
“திரும்பிப் பார்க்கிறேன்“ என்னும் இந்நூல் ஹைக்கூ திலகம் கவிஞர்
இரா.இரவியின் 33 வது நூலாகும். 46 ஆளுமைகளை 78 பக்கங்களில்
உள்ளடக்கியுள்ளது. புகழார்ந்த வானதி பதிப்பகம் சர்வதேச தர எண்ணுடன்
வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது. இந்நூலிற்கு அணிந்துரையை கலைமாமணி
ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் அணி செய்துள்ளார். அணிந்துரையில், “
கவிஞருக்குப் பார்க்கும் எதுவும் பாடுபொருளாகிவிடுகிறது என்றும், பேராசிரியர் இரா.
மோகன் அளித்த இலக்கியப் பரிசு இரா.இரவி என்றும் கவிஞரைப் பாராட்டுகிறார்.
மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமில் தொடங்கி ஹலோ
பண்பலை செல்வகீதா வரை திரும்பிப் பார்த்து தனது நினைவலைகளில் நீந்தியவர்கள
கரை சேர்க்கும் விதமாக இந்நூலை காணிக்கையாக்கியுள்ளார் என நினைக்கின்றேன்.
கவிஞரை ஆட்கொண்ட ஆளுமைகள் அனைவரும் இங்கு
அடையாளப்படுத்தப்பட்டு அணிசேர்கின்றனர். அவர்களிடம் தமக்கு உண்டான
அறிமுகம், நட்பு குறித்த நிகழ்வுகளை நயம்படக் கூறியுள்ளார். இதில் உள்ள ஒரு
சிறப்பு என்னவெனில், தனக்கும் தாம் எடுத்துக்கொண்ட நபருக்குமான நினைவுகளை
மட்டும் தவழவிடால் அவர்களது மற்ற நற்பண்புகளை நம் சிந்தனை ஓட்டத்தில் சீர்
தூக்கிச் செல்கிறார். இது வாசகருக்கு அவர்களைப்பற்றிய ஆகச்சிறந்த குணங்களை
வாசிப்பதன் வாயிலாக அவர்களை நேசிக்க கற்றுத்தருகின்றது. மேலும் அவர்களின்
பண்பு நலன்களை யாசிக்கவும் தம்மை மேம்படுத்துவது குறித்து யோசிக்கவும்
செய்கின்றது.
குடியரசுத்தலைவர் வேட்பாளராக மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர்
அப்துல் கலாம் ஐயா அவர்கள் அறிவிக்கப்பட்டவுடனே அவர் வெற்றி பெறுவார் என
அறுதியிட்டு வாழ்த்துமடல் அனுப்பியுள்ளார் கவிஞர். எத்தகைய ஒரு தீர்க்கமான
நம்பிக்கை என ஆச்சரியப்பட வைக்கின்றது. வெற்றி பெற்ற பின்னர் வாழ்த்துமடல்
அனுப்புவோர்களுக்கு மத்தியில், வெற்றி பெற வாழ்த்துமடல் அனுப்பியுள்ளது
கவிஞரது மாண்பினைக் காட்டுகின்றது. இக்கட்டான சமயத்தில், கலாம் ஐயா
அவர்களுக்கு உடனடியாக முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின்
நூல்களை விமானத்தில் அனுப்பி வைத்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்
கவிஞர். இதனால் கலாம் ஐயாவின் பாராட்டுதலும், முதுமுனைவர் “புலிப்பால்
இரவி“ என்ற பட்டம் சூட்டியதும் மனம் கொள்ளத்தக்கதாகும்.
ஒருமுறை மீனாட்ஷிமிஷன் மருத்துவமனைக்கு கலாம் ஐயா அவர்கள்
சிறப்புரையாற்ற வருகிறார். யாரோ தவறுதலாக விமான நேரத்தைக்
கூறிவிட்டார்கள். அன்று இரவு சென்னை திரும்பி ஆகவேண்டும். பத்து நிமிடம்
விமானம் தாமதமாகப் புறப்பட்டால் அவருக்குச் சரியாக இருக்கும்.
விமானநிலையத்தில் உதவி சுற்றுலா அலுவலராகப் பணியில் இருந்த கவிஞரிடம்
தகவல் தரப்பட்டது. மேலதிகாரிடம் கூறி ஒப்புதல் வாங்கிவிட்டார். கலாம் ஐயா
சரியான நேரத்திற்கு விமானத்தில் ஏறினார். கலாம் ஐயா அவர்களுக்கு கவிஞர்
சரியான நேரத்தில் செய்த உதவியை மட்டும் குறிப்பிட்டுச் செல்லாமல், கலாம் ஐயா
அவர்களது நற்பண்பையும் கவிஞர் சுட்டிக்காட்டியது சாலச் சிறந்தது. விமானத்தில்
ஏறியவுடன் ஆரம்பம் முதல் கடைசி வரை கை கூப்பி நடந்து சென்று என்னை
.
மன்னியுங்கள் உங்களின் பத்தி நிமிடத்தை நான் எடுத்துக்கொண்டதற்கு எனக்
கூறிவிட்டு அமர்ந்திருக்கிறார் என்ற கவிஞரின் பதிவு பெருமக்களின் பேராண்மையை
வியந்து போற்றவைக்கின்றது. தனக்கும் கலாம் ஐயாவிற்குமான நிகழ்வினை மட்டும்
குறிப்பிட்டுச் செல்லாமல், அவரைப்பற்றிய ஆகச் சிறந்த பண்பினையும் கவிஞர் பதிவு
செய்துள்ளது மனம் கொள்ளத்தக்கதாகும்.
நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் உலகத் திருக்குறள் பேரவைக்குச்
சிறப்புரையாற்ற வந்துள்ளார். அவரது உரையைப் பாராட்டி கடிதம் எழுதுியதோடு,
கடவுள் குறித்த கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என எழுதியுள்ளார்
கவிஞர்.. (கவிஞருக்கு சேட்டைதான்!) நீதியரசரை சந்திக்க அழைப்பு
விடுத்துள்ளனர். நண்பர்கள் கவிஞரைப் பயமுறுத்தியுள்ளனர். அச்சத்தோடு
சென்றவருக்கு அங்கு ஆனந்தமான வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களைப்
பாராட்டத்தான் அழைத்தேன் என்றுள்ளார் நீதியரசர். நீதியரசருக்கு பிடித்த
கவிஞரின் ஹைக்கூ, “மாதா பிதா குரு
மூன்றும் ஒரே வடிவில
மனைவி!
பின்னர் நீதியரசர் கவிஞரின் நூல்களுக்கு சிறந்த மதிப்புரையினை அளித்துள்ளார்
என்ற பதிவினைப் படிக்கும்போது, நல்லசிந்தனையும், செயல்திறனும் ஒருங்கே
செயல்பட்டால், மாபெரும் ஆளுமைகளையும் ஆட்கொள்ள முடியும் என்பதற்கு
கவிஞர் இரா.இரவி சிறந்த சான்றாவார்.
நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களைத் தொடர்ந்து, நீதியரசர்
இராமசுப்பிரமணியன், நீதியரசர் மகாதேவன், நீதியரசர் நாகமுத்து, நீதியரசர்
சிவகுமார், நீதியரசர் விமலா என்று நீதியரசர்களுக்கும் கவிஞருக்குமான தொடர்பு
நீண்டுகொண்டே போகின்றது….
கவிஞருக்கும் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களுக்குமான நட்பு
சொல்லித் தெரிவதில்லை. கவிஞரக்கு “புலிப்பால் இரவி“ என்று பட்டம் சூட்டியவரே
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள்தான். “இயங்கிக் கொண்டே இருக்க
வேண்டும்“ என்பதே அவரின் தாரக மந்திரமாகும். கவிஞருக்கும் முதுமுனைவர்
இறையன்பு இ.ஆ.ப.க்குமான நட்பினை “இறையன்பு கருவுலம்“ என்ற புத்தகத்தில்
விவரி்த்துள்ளார் கவிஞர்.
மதுரையில் என்ன ஒரு பிரச்சனை என்றாலும் அதனை இறையன்பு ஐயா
கவனத்திற்கு கொண்டு சென்று விடுவார் கவிஞர்.
மதுரை ஆத்திகுளம் பகுதியில் கண்மாய் உடைந்து குடியிருப்பு வீடுகளில்
மழைவெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடனே முதுமுனைவர்
இறையன்பு ஐயா கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நீர் அகற்றப்பட்டது.
மதுரையியின் பெருமைகளில் ஒன்றான் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து
வருடம் ஆன போதும் உணவகம் திறக்காமலே இருந்தது. மாணவர்கள் தேநீர் கூட
அருந்த முடியாமல் தவித்து வந்தனர். இறையன்பு ஐயாவின் கவனத்திற்கு கவிஞர்
கொண்டு சென்றவுடன் ஒரே வாரத்தில் 11-02-2025 அன்ற முதல் உணவகம்
திறக்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இத்தகையப் பதிவுகளைப் படிக்கும்போது, ஒரு படைப்பாளருக்கு படைப்பு
மட்டும் பொறுப்பன்று சமூகப் பொறுப்பும் உண்டு. சமுதாயச் சீர்கேடுகளைக்
களைவது கவிதையில் மட்டுமன்று களத்திலும் களைவது கவிஞரது கடப்பாடு
என்பதைச் சுட்டிக் காட்டிச் செல்வதை அறியமுடிகின்றது.
“மாயாண்டி குடும்பத்தார்“ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதி அனுப்பி
உள்ளார் கவிஞர். கவிஞரின் சிறப்பான விமர்சனம் பிடித்துப் போகவே படக்
குழுவினர் கவிஞரின் ஒளிப்படத்தோடு தினத்தந்தி நாளிதழில்
விளம்பரப்படுத்தியுள்ளார்கள்.
ஒருநாள் அலைபேசியில் அழைப்பு. நான் ஜெயலலிதா பேசுகிறேன் மாயாண்டி
குடும்பத்தார்“ விமர்சனம் படித்தேன் நன்றாக இருந்தது பாராட்டுக்கள். கவிஞராக
இருக்கும் நீங்கள் ஏன் திரைப்படத்திற்கு பாட்டு எழுதக்கூடாது? என்றுள்ளார். ஜெயா
தொலைக்காட்சியில் சொல்லி விடுகிறேன் ஒரு நாள் பேசுங்கள் என்றாராம். கவிஞர்
சரிங்கம்மா! என முடித்துக்கொண்டார். (அச்சமயம் ஜெயலலிதா அவர்கள்
எதிர்க்கட்சித் தலைவர்) சில நாட்களில் ஜெயா தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு
வந்துள்ளது. கவிஞர் சென்னை சென்று நேர்முகம் பதிவுசெய்துள்ளார்கள். இதனை
கவிஞர் வலைதளத்தில் ஆவணப்படுத்தியுள்ளார். (வரலாறு முக்கியம் அமைச்சரே)
பின்னர் ஜெயலலிதா அவர்கள் முதல்வர் ஆனபின்பும் கவிஞர் பாராட்டி கடிதம்
எழுதியுள்ளார். அதற்கும் நன்றி சொல்லியுள்ளார் முதல்வர். இந்த செய்தியினைப்
படிக்கும்போது, எடுத்துக்கொண்ட பணியினை செவ்வனே செய்து முடித்தால், சீரும்
சிறப்பும் நம்மை வந்து சேரும் என்பதை உணர முடிகின்றது. வாய்ப்புத் தேடி ஓடும்
காலத்தில் வாய்ப்பு கவிஞரைத் தேடிச் சென்றுள்ளது. திறமைக்கு என்றும் மதிப்புண்டு.
இவ்விடம் கவிஞர் இரா.இரவி செம்மாந்து நிற்கிறார். நிறைவாக, இவை யாவும்
நடந்த உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை எனக் கவிஞர் கூறியிருப்பது
கவிஞரின் வெள்ளந்தியான மனதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. இவை
போன்று தம்மை ஆட்கொண்ட ஆளுமைகள் குறித்த சுவையான நிகழ்வுகளை
எடுத்துரைத்துள்ளது நயமானது என்பதைவிட நமக்கு நல்ல பாடமாகவும் உள்ளது.
பதச்சான்றாக,
தமிழ்ச்சுடர் பேரா.நிர்மலா மோகன் அவர்கள் குறித்துக் கூறுகையில், பாரதி
கண்ட புதுமைப்பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்கிறார். (ப.43)
பெரியார் நெறியாளர் பி.வரதராசன் அவர்களை, ஐயப்பன் கோவில் பஜனை
பாடி வந்த என்னை அழைத்து பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியாரின்
கருத்துக்களை எடுத்துரைத்து என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். என்
வாழ்வின் குரு எனப் போற்றுகிறார். (ப.49)
“கலைமாமணி“ ஏர்வாடியார் குறித்து “ஏர்வாடியார் கருவுலம்“ என்று நூலினைக்
கவிஞர் படைத்துள்ளார். எனது பெரும்பாலான நூல்களுக்கு அணிந்துரை வழங்கிடும்
ஆஸ்தான ஆசிரியர் ஏர்வாடியார் என்று அகமகிழ்ந்து உரைக்கிறார். (ப.50)
உலகத்திருக்குறள் பேரவையின் மதிப்புறுத் தலைவர் கார்த்திகேயன்
மணிமொழியனார் அவர்கள் குறித்து, அப்பாவின் வழியில் தடம் மாறாது சீரிய
செயலாற்றி வருபவர் எனக் குறிப்பிட்டு, பணம் இருக்கும் பலருக்கும் மனம்
இருப்பதில்லை. இவர்களுக்கு பணமும் உண்டு, மனமும் உண்டு எனச்
சிறப்பிக்கிறார்.(ப.51)
முனைவர் ஞா. சந்திரன் அவர்களின் நட்பைப் பெருமிதமாகக் குறிப்பிட்டுப்
போற்றுகிறார். தனது திரைச்சுவடு நூல் வெளிவருதற்கு காரணகர்த்தா நண்பர்
ஞா.சந்திரன் எனக் குறிபிட்டுள்ளது கவிஞரின் பெருங்குணத்தைக் காட்டுகின்றது.
(ப.56)
கவிஞர் முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் குறித்த நட்பினைக் குறிப்பிட்டு,
தமிழ்ச் செம்மல் விருது பெற்றதும், சென்னையில் ஐயாவின் அலுவலகத்திற்கு
அழைத்து பொன்னாடை போற்றி பாராட்டியதை மகிழ்வோடும் நெகிழ்வோடும்
குறிப்பிட்டுள்ளார். (ப.63)
இத்தனை பெரிய ஆளுமைகளுக்கு மத்தியில் என்னையும் ஒரு பொருட்டாகக்
கருதி எழுதிய கவிஞருக்கு மனமார்ந்த நன்றி! (ப.44)
கவிஞரின் திரும்பிப்பார்க்கின்றேன் நூலினைப் படிக்கும்போது, கவிஞர் கடந்த
வந்த பாதையையும் மனதில் நின்ற மனிதர்களையும் திரும்பிப் பார்ப்பது என்பது
மகிழ்ச்சி மட்டுமல்ல மகத்தான பண்பும்கூட. ஆம் இது ஒரு வகையில் நன்றி
செலுத்தும் விழா என்றே சொல்லவேண்டும். நன்றி செலுத்தும் விழாவினை மிக
விமர்ச்சனையாகக் கொண்டாடியுள்ளார் கவிஞர்.
“யாரொடும் பகைகொளல் என்றபின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது” என்ற
கம்பனின் வரிகளுக்கு வரைவிலக்கணமாகக் கவிஞர் திகழ்கிறார் என்றால் அது
மிகையல்ல.