மரத்தச்சன்

தோள் வரை புரண்டு காற்றில் பறந்த வண்ணம் இருக்கும் சுருள் கேசம். கைவேலையின் விசையினாலான காற்றின் சிறகடிப்பாய் அதனை உணரத் தலைப்படுகிறேன். இன்றும்...
மரம் சீவிக்கொண்டிருக்கும் அந்த மனிதரைத் தான் சொல்கிறேன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தச்சு வேலைக்கு வருபவர் அவர்.

முள் வேலி தாண்டிய பகுதிக்கு இடையே ஒரு திறப்பு ; திறந்த இடைவெளி. சிறுவயதில்
அதனூடு நான் பக்கத்து வீட்டு உறவினர் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அந்த வாயிலின் அருகே கிளைபரப்பிய அன்னமின்னா மரமொன்று அப்படியே சற்று மணலில் கால் புதைய நடந்து போனால் ஆறடி உயரத்தில் ஒரு தென்னைமரம். அவ்வீட்டின் அருகே தகரத்தினால் ஆன ஒரு சரிவான சிறிய இணைப்புக் கூரை. தச்சு வேலைக்கென இடப்பட்ட மரத்தினாலான ஒடுங்கிய சிறு மேசை மர அமைப்புடைய உயர்த்தியில் உடல் முழுவதும் இயக்குமாறு பலகை சீவிக் கொண்டிருந்தார் அம்மனிதன்.

தன் பக்கம் நிகழும் சிறு அசைவுகளையும் பொருட்படுத்தாது வேகமாக தன் கைகளை அழுந்த வீசி சீவிக் கொண்டிருந்தார். குனிந்த தலை கைவேலையில் லயித்திருக்க சுருண்டு நெளிந்த கேசம் காற்றில் அலை பாய, திம்மென முறுக்கேறிய உடல்வாகை நிலை நிறுத்தியிருந்தன கால்கள். இடுப்பிலணிந்த வெளிர்நிற சாறன் கெண்டைக்கால் வரை தழுவியிருந்தது. முகந்தில் தாடியும் சாந்தமும் அமைதியும் குடி கொண்டிருந்தது.

செய்வேலையில் முனைத்திருந்தவர் அருகே தரையில் சுருள் சுருளாக மரச் சீவல்கள் பூக்களாகக் குவிந்திருந்தன. காற்றில் எங்கும் பச்சை மர வாசனை. என்னவென்று உணர்த்த முடியாச் சுகந்தம் மனதை நிரப்பிக் கொண்டிருந்தது.

விளையாடத் தான் பக்கத்து வீட்டுக்குச் சென்றேன் ஆனால் அம்மனிதரின் வேலை இலாவகத்தையும் தரை நிரம்பிய மரச்சீவற்பூக்களையும் எல்லாவற்றிலும் மேலாக அச்சூழலின் மரவாசனையை ஆழச் சுவாசித்துக் கொண்டு சிலையென அம்மனிதரையே பார்த்துச் சற்று நேரம் நின்றேன்.

தன்னருகே நடப்பவை எதையும் கண்டு கொள்ளாது அம்மனிதன் தன்பணியில் கவனமாயிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

பணிமுடிந்து நீங்கும் தறுவாயில் புன்முறுவலும் தலையசைப்புடனே விடைபெற்ற அம்மனிதர் என் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தார்.

அதன் பின்னர் அவர் வேலைசெய்யும் இடம் தாண்டும் போதெல்லாம் மரவாசனை என்னைச் சூழ்வதை உணர்ந்தேன்.

பின்னொரு நாளில் தெரிய வந்தது அவர் வாய் பேச முடியாதவர் என்று.

எழுதியவர் : நர்த்தனி (13-May-25, 11:45 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 11

மேலே