உடல் வேறானாலும் உயிர் ஒன்றே
உடல் வேறானாலும் உயிர் ஒன்றே
முத்தையா சாமி ஒரு தேங்காய் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி. அவன் கடினமாக உழைத்து
தனது வியாபாரத்தை நடத்தி அதனால் வரும் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்து
வாழ்க்கையை நடத்தி வந்தான். அவன் வாழ்ந்தது ஒரு சிறிய கிராமத்தில் அதன் பெயர் வல்லம்.
அடிக்கிற வெயிலில் சைக்கிள் மிதித்து மிதித்தே ஓய்ந்து போய் விடுவார் முத்தையா. ஆனாலும்
அவருக்கு வேறு வழியில்லை வெயிலோ மழையோ புயலோ எதுவானாலும் அவரது பிழைப்பு
நடந்தாக வேண்டுமே. என்றும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிவிடுவார் தென்னை மரம்
கூட இத்தனை தேங்காய்களை தாங்கி நிற்காது அந்த அளவிற்கு முத்தையா மூட்டைகளையும்
பைகளையும் அடுக்கிக்கொண்டு மெதுவா சைக்கிளை மிதிக்க துவங்கிவார் . எப்படியும் அவர்
வல்லம் வீட்டில் இருந்து செங்கோட்டை ஊருக்குள் செல்ல ஒரு 10 மணி ஆகிவிடும் ஏனென்றால்
அவர் சைக்கிளில் உள்ள பாரமும், இவர் சைக்கிள் ஓட்டும் திறனும் அப்படி. செங்கோட்டை
நல்வரவு வளைவை தாண்டும் வரையில் அவர்வருகையை நோக்கி தேங்காய் வாங்க ஒரு கூட்டமே
காத்திருக்கும். அவரது தேங்காய் யாவையும் பெரியதாகவும் மிகவும் நன்றாகவும் இருக்கும்.
இப்படி தினமும் ஒவ்வொரு ஊர் என வாரத்தில் ஏழு நாட்களும்
கற்குடி,தென்காசி,இலஞ்சி,மேலகரம், சுப்ரமணியபுரம்,பாப்பான்குளம் எனச் சுற்றி தேங்காய்
விற்பனை செய்வார் முத்தையா. அருகிலே உள்ள சில கடைகளுக்கும் விற்பனை செய்யவும்
காய்களை கொடுப்பார். ஞாயிற்று கிழமைகளில் அந்த கடைகளில் இருந்து வசூலை கொண்டு
வருவார் . மீண்டும் தேங்காய் தோட்டத்தில் தேங்காய் இறக்கிக் கொண்டு வியாபாரத்தைப்
பார்ப்பார். இப்படியே இவர் வாழ்க்கை தேங்காய் மூட் டைகளோடும் அதை வாங்கும்
வாடிக்கையாளர்களோடும் மட்டுமே கழிந்தது . இவருக்கு குழந்தைகள் கிடையாது மனைவி
மங்கலாதேவி மட்டுமே ஒரு துணை. மங்கலாதேவியோ யாரிடமும் சிரித்தப்பேசிப்பழக
யோசிப்பாள் . முத்தையா அப்படியே நீர்மாறானவர் குழந்தை இல்லை என்ற வருத்தம்
எப்பொழுதும் இல்லாமல் சிரிப்புடன் எல்லோரிடமும் பழகும் குணம்படைத்தவர். மங்கலா
தேவிக்கோ தாழ்வு மனப்பான்மை அதிகம்.
முத்தையா தேங்காய் விற்க மூட்டைகளைத் திறக்கும் பொழுது சில காய்கள் உடைந்தும் ,
வெடிப்பு வந்தும் இருக்கும். அந்த தேங்காய்களை வீட்டுக்கு வரும் வழியில் கண்ணில் படும் சில
குழந்தைகளுக்குச் சாப்பிட உடைந்த தேங்காய் துண்டுகளைக் கொடுப்பது வழக்கம். அது போக
அந்த உடைந்த துண்டுகளில் ஒரு சில பெரிய துண்டுக்களை மட்டும் தனக்கென்று எடுத்து
வைத்துக்கொண்டு தினமும் வீட்டுக்கு வந்தவுடன் மங்கலா தேவியிடம் விற்பனை கணக்குகளை
பகிர்நது வருவாயினை ஒப்படைத்து விட்டு சைக்கிளில் மீதம் இருக்கும் தேங்காய்களை இறக்கி
வைத்துவிட்டு. அந்த ஒரு சில பெரிய துண்டு தேங்காயை எடுத்துக்கொண்டு வீட்டு
வெளித்திண்ணையில் ஒரு மூலையி வைத்து விட்டு உள்ளே சென்றுவிடுவான். மறுநாள்
காலையில் பார்க்கும் போது அந்த பெரிய துண்டு தேங்காய் அந்த இடத்தில் இருக்காது. இப்படி
நாள்தோறும் நடக்கும். ஒரு நாள் முத்தையா விற்பனை முடித்து வந்த கையோடு சட்டென்று வீட்டு
திண்ணையில் மயங்கி வீழ்ந்தான்.மங்கலா தேவி பதறிப்போய் ஓடி வந்தாள்.
மயக்கமுற்ற முத்தையாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள். உள்ளே போகச் சொல்லி
ஓய்வு எடுக்கச் சொன்னாள் . சைக்கிளில் உள்ள மீதி தேங்காய்களை இறக்கி எடுத்து வைத்தாள்.
முத்தையா மங்கலா மங்கலா என்று கூப்பிட்டார். என்னவென்று கேட்க ஓடினாள் உள்ளே. அந்த
பையில் இருக்கும் பெரிய துண்டு தேங்காய்களை மட்டும் வீட்டு திண்ணையின் கடைசியில்
வைத்துவிட்டு வா என்றார்.
அவளும் பதில் ஏதும் பேசாமல் தேங்காய் துண்டுகளை வைத்து விட்டு வந்தாள். மறுநாள்
காலையில் அந்த தேங்காய் துண்டுகளைக் காணவில்லை.. இது என்ன தினமும் இவர் இங்கே
தேங்காய் வைப்பார் காலையில் காணமல் போகும். நான் ஏதோ உடைந்த தேங்காய் மீதியை
அங்கே வைக்கிறார் என நினைத்தேன். நேற்று உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையிலும்
மறக்காமல் என்னை அழைத்து வைக்கச் சொன்னாரே, என்றுமனதில் கேள்வியுடன் காத்திருந்தாள்
. மறுநாள் முத்தையா உடல்நிலை சரியாக இல்லை என்பதால் வியாபாரத்திற்கு போகவில்லை .
அன்று இரவிலும் ஒரு தேங்காயை எடுத்து உடைத்து அதில் ஒரு துண்டை திண்ணையில்
வைத்தான். மங்கலாதேவி இதை பார்த்து விட்டு விரைந்து வந்தாள் என்ன இது நீங்கள் இன்று
வியாபரத்திற்கு போகவில்லை . நேற்றிலிருந்து உடல்நிலை சரியில்லை ஆனாலும் இந்த தேங்காய்
துண்டு மட்டும் தினமும் இரவில் வீட்டு திண்ணையில் மறக்காமல் வைக்கிறீங்களே எதற்கு ? என்று
கேள்வி கேட்டாள் . முத்தையா கண்கள் கலங்கி ஒரு சிரிப்போடு கயிற்றுக்கட்டிலில் சாய்ந்து
படுத்தான். வானத்தை பார்த்தபடியே விழிகளை சுருக்கினான். வலக்கையினை தலையின்
நெற்றியில் பதித்தபடி படுத்தான் . மங்கலா தேவி மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் சிறிய
ஆவேசத்தில் இது நான் செய்த பாவத்துக்குப் பிராயசித்தம் என்று தான் வச்சுக்கோ என்றான்.
என்ன சொல்றீங்க என்ன பாவம் என்ன பிராயசித்தம் என மீண்டும் துளைத்தாள். கட்டிலில்
இருந்து எழுந்தான் முத்தையா ஆமாம். நான் பெரிய பாவம் பண்ணிட்டேன். நம்ம வீட்ல தேங்காய்
உடைசல்களை கொண்டு வந்து வைப்பேன் அதை காயப்போட்டு எண்ணெய் எடுக்கலாம் என
நினைத்து சேர்ப்பேன் அது உனக்கு தெரியும் தானே என்றான். ஆமாம் அது தான் இப்ப
இல்லையே என்றாள். ஆமாம் அந்த வேலையை நிறுத்திவிட்டு தான் இப்ப விமோசனம்
தேடிக்கிட்டு இருக்கேன் என்றான். அய்யோ விவரமா சொல்லுங்க ஏன் இப்படி ஏதேதோ சொல்லு
கிறீங்க என அவள் சினந்தாள். வழக்கமாக மீதமுள்ள உடைந்த தேங்காய்களை இரவில் கொண்டு
வந்து நம் திண்ணையில் போடுவேன் ஆனால் மறுநாள் காலையில் அந்த இடத்தில் தேங்காய்கள்
இருக்காது. இது எலிகளின் வேலை தான் என எனக்கு தெரியும் . ஒரு நாள் கோபத்தில் தேங்காய்
துண்டுகளின் மீது எலிமருந்து பூசிய கருவாட்டு துண்டுகளை மசித்து சேர்த்துத் தடவி வைத்தேன்.
மறுநாள் காலையில் நம் வீட்டின் பின்புறத்தில் அங்காங்கே சில எலிகள் இறந்து கிடந்தன.
அவற்றை அப்புறப்படுத்தினேன். விற்பனைக்கு கிளம்பினேன். தேங்காய் மூட்டைகளைச்
சைக்கிளில் ஏற்றினேன். அதில் ஒரு எலியின் வயிறு புடைத்து வயிற்றினுள் ஏதோ இருக்கும்
நிலையில் இறந்து கிடந்தது அதையும் எடுத்து தூரப்போட்டுவிட்டு வியாபாரத்திற்குக்
கிளம்பினேன், என்று சொல்லிக்கொண்டே கண்ணீர்விட்டான். சரி இதற்கு ஏன் அழுகிறீங்க
தொல்லை கொடுக்கிற எலியை கொல்வது சாதாரணம் தானே இது எல்லோரும் செய்கிறது தானே
எனக் கேட்டாள். ஆமாம் நானும் அப்படி நினைத்துத் தான் வியாபரத்திற்கு கிளம்பினேன்.
உனக்கு நினைவிருக்கா தெரியலை அன்னைக்கு தான் நம்ம குழந்தை கருவிலேயே காணம
போனதாக அறிந்த நாள் நீயும் நானும் சுக்கு நூறாய் நொறுங்கிய நாள். இன்னைக்கு வரை
மீண்டும் ஒரு குழந்தை வந்து உன் வயிற்றில் உதிக்காதான்னு காத்திட்டு இருக்கோம் எனக்
குலுங்கி அழுதான். மங்கலா தேவியும் அழுதாள். நான் செய்த பாவத்தின் வினை தான் அன்று என்
குழந்தையை காணாமல் போகச் செய்தது என்றே நான் நினைக்கிறேன்.
அந்த பாவத்துக்கு விமோசனம் தேடி தான் தினமும் எலிகளுக்கு தேங்காய் வைக்கிறேன் என்றான்
முத்தையா. இது முட்டாள் தனமோ இல்லை மூடநம்பிக்கையான்னு எனக்கு தெரியவில்லை
ஆனால் எந்த உருவத்தில் இருக்கும் இனமும் உயிர் தானே. இறைவன் படைப்பில் எல்லா
உயிரினமும் ஒன்னுதான்னு எனக்கு அன்றைக்குத் தான் புரிஞ்சுது. உருவத்திலும் வாழ்விலும்
வெவ்வேறாக தோன்றினாலும் வலி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே என்று மனைவியிடம்
கூறினான். தான் செய்த தவறுக்குப் பரிகாரமாய் இன்றும் எலிகளுக்கு தேங்காய் துண்டுகளை
வைத்து வருகிறான். எப்படியோ ஒரு உயிருக்கு தினமும் உணவு கொடுக்கும் முத்தையா.
இறைவன் எல்லா உயிரங்களிலும் வாழ்கிறான் என்ற உண்மையை நாம் அறிந்து நமது பல
ஜென்மங்கள் செய்த நற்செயலால் தான் இப்பொழுது இந்த மனித பிறவியில் பிறந்திருக்கிறோம்
என்று உணர்ந்து,பல உயிரனங்கள் நம்மை தொல்லை செய்தாலும் அவைகளை வலி ஏற்படாமல்
விரட்டி விட்டு அவைகள் வாழ வகை செய்பவன் இறைவனை மகிழ வைத்து அவரது
கருணையைப் பெற்று நல்ல வாழ்க்கையை அடைகிறான் என்பது எதார்த்தமான உண்மை என
அறிந்து அதன் வழியே செயல் படுவோம் நன்மையை அடைவோம்.