வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே - முத்தொள்ளாயிரம் 42

நேரிசை வெண்பா

வரக்கண்டு நாணாதே வல்லையா னெஞ்சே
மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென் – றிரக்கண்டாய்
வாளுழுவை வெல்கொடியான் வண்புனல்நீர் நாடற்கென்
தோளழுவம் தோன்றத் தொழுது! 42

- முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

வெல்லும் புலிக்கொடியான், வளமையான ஆற்றுப்புனல் பாயும் நாடன், சோழன் உலா வரக் கண்டு, பெண்மை உணர்வோடு நாணியிருக்க உன்னால் முடியுமா? முடியாதே.

அதனால், நெஞ்சே! நாணாமல் அவனைக் கண்டு இர. உன் கண் என்ன மரத்தாலான கண்ணா (இரக்கம் இல்லாத கண்ணா) என்று கேட்டு இர (கண்ணோட்டத்துடன் இரக்கம் காட்டும்படிப் பிச்சை கேள்) |

வாள் உழுவை = கண்ணைக் கவரும் ஒளி மிக்க புலி.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (22-Sep-25, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே