இன்னிசை இருநூறு 11

இரண்டாவது அதிகாரம் – அறம்
இன்னிசை வெண்பா

மெய்யறிவன் நூலின் விதித்த விலக்கிய
செய்தலுஞ் செய்யா விடலுந் திகழறன்
மைதீர் மனநாவாற் காயத்தால் வாய்ப்பன
செய்கவெஞ் ஞான்றுந் தெரிந்து! 11

- இன்னிசை இருநூறு

பதவுரை:

மெய்யறிவன் நூலின் – மெய்யறிவனாகிய திருவள்ளுவரின் நூலாம் திருக்குறளில் சொல்லப்பட்டவைகள்

விதித்த விலக்கிய – அறநூல்களில் சொல்லி விதியாக்கப் பட்டுள்ளவைகளை, சொல்லித் தவிர்க்கும்படி விலக்கப்பட்டவைகளை

செய்தலுஞ் செய்யா விடலும் – விதித்தவற்றை செய்பவர்களாகவும், விலக்கப்பட்டவற்றைச் செய்யாதவர்களாகவும்

திகழ் அறன் – நீங்கள் விளங்குவீர்களாயின் அதுவே அறமாகும்; அறவழி நின்றவர்களாகவும் ஆகும்.

மைதீர் – குற்றமில்லாதபடி

மன, நாவால், காயத்தால் – மனத்துள் கொள்ளும் நினைவாலும், சொல்லும் சொற்களாலும், உடலால் ஆற்றும் நற்செயல்களாலும்

வாய்ப்பன – உங்களுக்கு வாய்த்த வழிகளிலெல்லாம்

எஞ் ஞான்றுந் தெரிந்து – எப்பொழுதும் முழுவதுமாக அறிந்து

செய்க – ஆற்றுவீர்களாக

தெளிவுரை:

மெய்யறிவனாகிய திருவள்ளுவரின் நூலாம் திருக்குறளில் சொல்லப்பட்டவைகளையும், அறநூல்களில் சொல்லி விதியாக்கி விதித்தவற்றையும் செய்பவர்களாகவும், சொல்லித் தவிர்க்கும்படி விலக்கப்பட்டவைகளைச் செய்யாதவர்களாகவும் நீங்கள் விளங்குவீர்களாயின் அதுவே அறமாகும்; அறவழி நின்றவர்களாகவும் ஆகும்.

ஆதலால், குற்றமில்லாதபடி மனத்துள் கொள்ளும் நினைவாலும், சொல்லும் சொற்களாலும், உடலால் ஆற்றும் நற்செயல்களாலும் உங்களுக்கு வாய்த்த வழிகளிலெல்லாம் எப்பொழுதும் முழுவதுமாக அறிந்து நற்செயல்களை ஆற்றுவீர்களாக என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (7-Oct-25, 4:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே